கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

Manjula Devi
Oct 21, 2024,10:32 AM IST

சென்னை:   தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்கள், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை நீடிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்க கடலில் உருவான வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி காரணமாக நேற்று பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்று இரவு முழுவதும் அநேக இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக திருப்பூர், கோவை,மதுரை, நாமக்கல், வால்பாறை, ஓசூர், உதகை, திருவண்ணாமலை, சேலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை நல்ல மழை பெய்துள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 10 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. 




இதற்கிடையே வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். பின்னர் இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் புயலாக வலுப்பெற கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தமிழ்நாட்டின் இன்றைய மழை குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, 


கோவை,தருமபுரி , ஈரோடு , கரூர் , கிருஷ்ணகிரி , நாமக்கல் , நீலகிரி , திருப்பூர் சேலம்  மற்றும் தென் மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும்.  


நேற்று உள் மற்றும் தென் மாவட்டங்களில் காற்றுடன் மழை பெய்ததால் அம்மாவட்டங்களில் கண்கவர் நாளாக அமைந்திருந்தது. அதேபோல் இன்று முதல் நாளை காலை வரை  காற்று வீச இருப்பதால் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இதமான சூழல் நிலவும். இது தவிர பெங்களூர் மாவட்டத்திலும் இன்று கனமழை வாய்ப்புள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சேலம், திருப்பூர், தேனி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருநெல்வேலி, மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளிலும் பரவலாக 50 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்