ஏதோ வரலாறு படைக்க நினைக்கிறார் போலும்.. நிதீஷ் குமாரை டபாய்த்த லாலு யாதவ் கட்சி!

Su.tha Arivalagan
Jan 27, 2024,06:49 PM IST

பாட்னா: பீகாரில் உள்ள அகண்ட கூட்டணியிலிருந்து விலகப் போகிறாரா அல்லது நீடிக்கிறாரா என்பதை நிதீஷ் குமார் விளக்க வேண்டும் என்று கூறியுள்ளது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமார் இணையப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இதுகுறித்து ராஷ்டிரிய ஜனதாதளம் துணைத் தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில்,  எங்களது எந்தக் கேள்விகளுக்கும் நிதீஷ் குமார் பதிலளிக்கவில்லை.  அவரை சந்திக்க நேரம் கேட்டோம். இதுவரை தரவில்லை. மீண்டும் ஒரு தவறை செய்ய அவர் தயாராவது போலத் தெரிகிறது. இப்போது போய் நாம் எதைப் புரிந்து கொள்ள வேண்டும்.. அதுதான் வெட்ட வெளிச்சமாகி விட்டதே. எல்லாமே கண்ணுக்குத் தெரிகிறது. எத்தனை தடவைதான் அவர் அங்கு போவார். ஏதோ சாதனை செய்ய நினைக்கிறார் போல என்றார் திவாரி.




ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி எம்பி மனோஜ் குமார் ஜா கூறுகையில் கூட்டணியில் நீடிக்கிறேனா இல்லையா என்பதை அவர் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் போகப் போகிறாரா என்பதையும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அனைவரும் சேர்ந்துதான் இந்த அரசை அமைத்தோம். பாஜகவை வீழ்த்த வேண்டும், மக்கள் நலனைக் காக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருந்தது. எனவே அவரது முடிவு மக்களைப் பாதிக்கும். முதல்வர் முதலில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.


இதற்கிடையே,  பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் யாதவின் வீட்டுக்கு தலைவர்கள் பலரும் வந்து செல்கின்றனர். லாலு பிரசாத்துடனும், அவரது மகனும், துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுடனும் தொடர் ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


பல வருடங்களுக்கு முன்பு செய்தது போல இப்போது நிதீஷ் குமார் செய்து விடாமல் தடுக்கத் தேவையான முன்னேற்பாடுகளுடன் நாங்கள் உள்ளோம். எங்களுக்கு மெஜாரிட்டிக்கு 20 இடங்களே குறைவாக உள்ளன.  சபாநாயகர் எங்களது கட்சியைச் சேர்ந்தவர்தான். எனவே ஒரு வேளை நிதீஷ் குமார் வேறு மாதிரியான முடிவெடுத்தால் சபாநாயகர் உதவியுடன் நாங்கள் ஆட்சியமைக்க முயல்வோம் என்று கூறுகிறது ராஷ்டிரிய ஜனதாதளம்.