அண்ணாமலை 25 என்கிறார்.. எல். முருகனோ 9 என்று சொல்கிறார்.. பாஜகவின் குறி என்ன?

Su.tha Arivalagan
Apr 02, 2023,03:46 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக எத்தனை  தொகுதிகளில் வெல்ல  மும்முரமாக உள்ளது என்பதில் இரு வேறு கருத்துக்களை அண்ணாமலையும், எல். முருகனும் சொல்லியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபாதொகுதிகள் உள்ளன. புதுச்சேரியில் ஒருசீட் உள்ளது. இந்த நாற்பது தொகுதிகளையும் குறி வைத்துத்தான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் உத்திகளை வகுக்கும்.

கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஒரு தொகுதியைத் தவிர (தேனி) மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக உள்பட  அனைத்துக் கட்சிகளும் தோல்வியைத் தழுவின.



இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தலுக்கான முஸ்தீபுகளை கட்சிகள் தொடங்கி விட்டன. இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தொடர்ந்து  பல்வேறு இடங்களிலும் பேசும்போதும், 25 தொகுதிகளில் வெல்லும் நோக்குடன் செயல்பட்டு வருகிறோம் என்றே கூறி வருகிறார். இன்றும் கூட செய்தியாளர்களிடம் பேசும்போதும், 25 தொகுதிகள் என்றே குறிப்பிட்டார்.

ஆனால் மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று அளித்த ஒரு பேட்டியின்போது தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுக்கு இலக்கு நிர்ணயித்திருப்பதாக கூறினார். அவர் பேசும்போது,  வேலூர், ஈரோடு, சிவகங்கை, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி , ராமநாதபுரம், தென் சென்னை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளுக்கு கவனம் வைத்துள்ளோம். நாடு முழுவதும் 150 தொகுதிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தவுள்ளது பாஜக. அதில்தான் இந்த 9 தொகுதிகளும் வருகின்றன என்று குறிப்பிட்டார் எல்.முருகன்.

அண்ணாமலை 25 தொகுதிகள் இலக்கு என்று கூறி வரும் நிலையில்,  9 தொகுதிகள் என்று கூறி பெயரும் குறிப்பிட்டு எல். முருகன் அளித்த பேட்டி விவாதங்களை எழுப்பியுள்ளது.