குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த .. 5 பேர் பலியானதாக .. அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

Meenakshi
Jun 13, 2024,06:11 PM IST

குவைத்:  குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 5 பேர் பலியாகி இருக்கலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.


குவைத்தில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் 200 தொழிலாளர்கள் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று காலை இங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 




இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதில் குழப்பம் நிலவுகிறது. இந்தப் பின்னணியில், 5 பேர் பலியாகியிருக்கலாம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ராமு கருப்பன், சின்னதுரை. கிரஷ்ணமூர்த்தி, முகமது ஷெரீப், ரிச்சர்டு ராய், வீராசாமி மாரியப்பன் உள்ளிட்டவர்கள் உயிரிழந்ததாக செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.


விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து குவைத் புறப்பட்டு சென்ற மத்திய இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், உயிரிழந்தவர்கள் பலரது உடல்கள் முழுவதும் கருகியுள்ளன. எனவே டிஎன்ஏ சோதனை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்கள் அடையாளம் காணப்பட்ட உடன், உடல்களை இந்தியா கொண்டு வர இந்திய விமானப்படை தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.