"எல்லோரும் செத்த கிளம்புங்க.. நல்ல காத்து வரட்டும்".. .பிரேக் விட்டார் குஷ்பு!

Su.tha Arivalagan
Jul 30, 2023,11:04 AM IST
சென்னை: கொஞ்சம் டிவிட்டருக்குப் பிரேக் விடப் போவதாக அறிவித்து விட்டு கிளம்பி விட்டார் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பாஜகவைச் சேர்ந்த குஷ்பு.

நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகள் தொடர்பாக எந்தப் பிரச்சினை நடந்தாலும் குஷ்பு வீட்டு கதவைத் தட்ட பலரும் மறப்பதில்லை. குஷ்பு மேம் இதைப் பத்திப் பேசுங்க.. இதை நீங்க பேசுனீங்களா.. இதையெல்லாம் பேச மாட்டீங்களா என்று விடாமல் டேக் பண்ணி டிவீட் போடாமல் விட மாட்டார்கள்.. அவ்வளவு "பாசம்" நம்மாட்களுக்கு குஷ்பு மீது.

அப்படித்தான் சென்னை கலாஷேத்திரா பிரச்சினையின்போதும் குஷ்பு ஏன் மெளனமாக இருக்கிறார் என்று கேட்டு பலரும் டிவிட்டரில் துளைத்தெடுத்தனர். மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி அக்கிரமம் செய்த சம்பவம் தொடர்பாகவும் கேள்விகளால் வறுத்தெடுத்தனர்.



இந்த நிலையில் சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் பெண்கள் கழிவறையில் ரகசியக் கேமரா வைத்து படம் பிடித்த சம்பவம் கர்நாடகத்தை உலுக்கியுள்ளது. அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்புவை, தேசிய மகளிர் ஆணையம் அனுப்பி வைத்தது. குஷ்புவும் உடுப்பி சென்று விசாரணை மேற்கொண்டார்.

இந்த விவகாரம் தொடர்பாகவும் குஷ்பிடம் பலரும் டிவீட் மேல் டிவீட் போட்டு வாதம் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது டிவிட்டருக்குப் பிரேக் விட்டுள்ளார் குஷ்பு. இதுதொடர்பாக அவர் ஒரு மெசேஜ் போட்டுள்ளார். அதில்,  ஹாய் நண்பர்களே.. நச்சுத்தன்மையிலிருந்து கொஞ்சம் விலகியிருக்க விரும்புகிறேன்.. அதனால் ரேடாரிலிருந்து தள்ளிப் போகிறேன்.. மீண்டும் வருவேன்.. அதுவரை உங்களைப் பார்த்துக்கங்க, நல்லா இருங்க. பாசிட்டிவா இருங்க. லவ்யூ ஆல் என்று கூறி ஒரு பெரிய ஹார்ட்டின் போட்டு விட்டு போய் விட்டார்.

இதுக்கும் நம்மாளுங்க கருத்துப் போட்டாகணுமே.. ஒருவர் வந்து, உங்களைப் போலவே தேசிய மகளிர் ஆணையமும் மணிப்பூர் விவகாரத்தில் ரேடாரிலிருந்து விலகிப் போய் விட்டது போல என்று கலாய்த்துள்ளார். அட விடுங்கப்பா அவங்களை.. பிரேக் முடிச்சுட்டு வரட்டும்.. அப்புறம் கன்டினியூ பண்ணுங்க!