என்ன கொடுமை சார் இது.. நம்ம தக்காளியா இது.. டென்ஷன் ஆன விவசாயி!

Su.tha Arivalagan
Sep 08, 2023,03:36 PM IST
திருப்பதி: திருப்பதியில் தக்காளி விலை கிலோவுக்கு 4 ரூபாய் என்று அடி மட்ட அளவுக்கு குறைந்து போனதால் பெரும் விரக்தி அடைந்த  தக்காளி விவசாயி தக்காளியை ரோட்டில் கொட்டிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

2 மாதங்களுக்கு முன்னாடி வரை இந்தியாவின் "விவிஐபி" யார் என்று கேட்டால் எல்லோரும் கோபத்துடன் திரும்பிப் பார்த்தது.. தக்காளியைத்தான்!. அந்த அளவுக்கு தக்காளி விலை பயங்கரமாக இருந்தது. ஜூன் மாதம் தக்காளியின் விலை அதீத உயரத்தில் இருந்தது. அதிகபட்சமாக ரூபாய் 200 வரை உயர்ந்திருந்தது. இதன் தாக்கத்தால் உணவகங்களில் தக்காளி சட்னி இல்லை. சாமானிய மக்கள்  வீட்டில் தக்காளியை வாங்குவதையும் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 



தக்காளியை தங்கத்துடன் ஒப்பிட்டு மக்கள் பலரும் தங்களின் வேதனைகளையும், விலைவாசி உயர்வையும் நினைத்து கவலையில் இருந்தனர். பலர் சமூக வலைத்தளங்களில் தக்காளி இல்லாத ரெசிபிகள் என அப்டேட்  கொடுத்துக் கலாய்த்தனர். பலரும் புலம்பித் தவித்தனர். அதேசமயம், தக்காளி வியாபாரிகள் ஹேப்பியாக இருந்தனர். 

ஆனால் கடந்த சில வாரங்களாக தக்காளி விலை வேகமாக குறைந்து இப்போது கிலோ 30 வரை தமிழ்நாட்டில் விற்பனையாகிறது. இதனால் மக்கள் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள விவசாயி தன்னுடைய தோட்டத்தில் விளைந்த தக்காளியை சாகுபடி செய்து சந்தைக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ தக்காளி ரூபாய் 4 க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயி தக்காளியின் விலையை கேட்டு கோபமடைந்தார்,வருத்தமடைந்தார்.

இதன் விலை கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகவில்லையே என்று வெதும்பிப் போய் தக்காளியை குப்பை போல சாலையிலேயே வீசி சென்றார். தக்காளி சாலையில் கொட்டி கிடப்பதை பார்த்து பலரும் வேதனை அடைந்தனர்.