என்னப்பா.. குடை எடுத்துக்கலாமா.. இன்னிக்கு கண்டிப்பா மழை வருமாம்.. வெதர்மேனே சொல்லிட்டாரு!

Manjula Devi
Jul 05, 2024,05:50 PM IST

சென்னை: வடகடலோர மாவட்டங்களான சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை இன்று கண்டிப்பாக எதிர்பார்க்கலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


பருவநிலை மாற்றத்தாலும், தென்மேற்கு பருவ மழையாலும், தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் காலையில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. அதேபோல மாலையில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பகல் நேரத்தில் வெயில் வாட்டி எடுத்தாலும் மாலை நேரங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. 




இதனால்  வெயிலும், மழையும் மாறி மாறி நிலவி வருகிறது. முன்னதாக தமிழ்நாடு வெதர்மேன் சென்னையில் காலையில் வெயில் அதிகரித்து, மாலை நேரங்களில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கேற்ப காலையிலிருந்து நல்ல வெயில் வெளுத்தது. இன்று சுளீரென வெயில் அடித்துக் கொண்டுள்ள நிலையில் அடுத்து மழை வரும் என்று வெதர்மேன் கூறியுள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், .மழைக்கான சூழல் கரெக்ட்டா வந்துகொண்டே இருக்கிறது. இன்று மாலை அல்லது இரவில் பெய்ய போகும் மழைக்காக நாம் காத்திருப்போம். இன்றைக்கு கண்டிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மாவட்டங்களில் மழை மிஸ் ஆகாது.


மற்ற மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், தரம்புரி, திருப்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 


ஆனால் கே டி சி சி அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை பிராந்தியத்தில் தான் இடியுடன் கூடிய கனமழையை எதிர்பார்க்கலாம் என்ன தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.