அரபிக் கடலில் "Low".. நமக்கு ஒன்னும் ஆகாது.. பயப்பட தேவையில்லை.. தமிழ்நாடு வெதர்மேன்!

Su.tha Arivalagan
Dec 09, 2023,10:49 AM IST
சென்னை: அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் சென்னைக்கோ அல்லது தமிழ்நாட்டுக்கோ பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் வராது. எனவே யாரும் பயப்படத் தேவையில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழ்நாட்டின் மேற்கு, தெற்கு மற்றம் உட்புற பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்போதுதான் மிச்சாங் புயல் வந்து ஒரு காட்டு காட்டி விட்டுப் போனது. தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்கள்தான் இதில் பெரும் பாதிப்பை சந்தித்து விட்டன. குறிப்பாக சென்னையிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மிகப் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது.



இந்த நிலையில் அரபிக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதை வைத்து சிலர் வதந்தி கிளப்ப ஆரம்பித்து விட்டனர். இது புயலாகும், நமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் வதந்திகளைக் கிளப்பி வருகின்றனர்.

ஆனால் இந்த காற்றழுத்தத்தால் நமக்கு எந்தப் பாதிப்பும் வராது, குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது, தமிழ்நாட்டுக்கும் கூட பாதிப்பு ஏதும் வராது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

மேற்கு,  தெற்கு, உட்புற தமிழ்நாட்டில் மழை  பெய்யும் . இதைத் தவிர வேறு ஒன்றும் நேராது என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். வாட்ஸ் ஆப்களில் சிலர் தேவையில்லாமல் பரப்பும் பார்வேர்டுகளை நம்பாதீர்கள், பயப்படாதீர்கள் என்றும் அவர் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.