பேரு கார்த்திக்.. மொத்தம்  3 பெண்கள்.. கப்புன்னு மடக்கிப் பிடித்த போலீஸ்!

Su.tha Arivalagan
Aug 23, 2023,04:14 PM IST
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 3 பெண்களை மோசடியான முறையில் திருமணம் செய்து ஏமாற்றியதாக போலீஸார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தரப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியில் ஆஞ்சப்பா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் . 23 வயதாகும் இவர் கனரக வாகன ஓட்டுனர் ஆவார். கார்த்திக்குக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது .இவர்களுக்கு ஆறு மாத குழந்தை  ஒன்று உள்ளது.



இந்நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமலேயே அதே பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். அத்தோடு நிற்கவில்லை இந்த காதல் மன்னன். விவசாய கூலி வேலைக்குச் செல்லும் பெண்ணை மூன்றாவது ஆக கோயிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.      

இப்படி அடுத்தடுத்து மூன்று பெண்களை மணந்து அவர்களுக்கே தெரியாமல் பல நாட்களாக மாறி மாறி 3 பேரிடமும் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி ஷிப்ட் போட்டு வாழ முடியும்.. ஒரு நாள் குட்டு உடைந்தது. கார்த்திக்கின் லீலைகள் அம்பலமாகின. 3 பெண்களுக்கும் தாங்கள் ஏமாந்தது தெரிய வந்தது. 

பாதிக்கப்பட்ட பெண்கள் மூவரும் தங்களது தாய் தந்தைகளுடன் சென்று உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த போலீஸார் கார்த்திக்கை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை விசாரணைக்கு எடுத்து விசாரிக்கும்போதுதான் அவருக்கு 3 மனைவிகள்தானா அல்லது வேறு யாரேனும் உள்ளனரா என்பது தெரிய வரும்.