கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்.. விஷம் குடித்த சிவராமன் மரணம்.. தந்தை விபத்தில் பலி!

Su.tha Arivalagan
Aug 23, 2024,05:07 PM IST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சிவராமன் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கிருஷ்ணகிரி  மாவட்டம் கந்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சமீபத்தில் என்சிசி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஒரு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதேபோல மேலும் பல மாணவிகளும் அதே நபரால் பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அப்போது நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்த சிவராமன் என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.




சிவராமனிடம் நடந்த விசாரணையின்போதுதான் நடந்தது உண்மையான என்சிசி முகாமே அல்ல என்றும் சிவராமன் ஏற்பாடு செய்த போலி முகாம் என்று தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், ஆசிரியர்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராமன் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகின. அவரைக் கைது செய்ய போலீஸார் முயன்றபோது தப்பி ஓட முயன்று வழுக்கி விழுந்து அவரது காலில் காயம் ஏற்பட்டிருந்தது.


இந்த நிலையில் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தகவல் வெளியானது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.


இதற்கிடையே, இன்னொரு திருப்பமாக சிவராமனின் தந்தை அசோக் குமார், நேற்று பர்கூரில் நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய முக்கியக் குற்றவாளியான சிவராமன் உயிரிழந்துள்ளதால் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்