KPY பாலா.. குடும்பத்துக்கு தலா ரூ. 1000.. மொத்தம் 2 லட்சம்.. என்னா மனுஷன்யா இவரு!

Su.tha Arivalagan
Dec 07, 2023,06:13 PM IST
சென்னை: மயில்சாமி என்று ஒரு நடிகர் இருந்தார். கையில் பத்து ரூபாய் இருந்தால் கூட, யாராவது உதவி என்று கேட்டால் அப்படியே கொடுத்து விட்டு போய் விடுவாராரம். இன்று அதே போல ஒருவர் அவதாரம் எடுத்து வந்துள்ளார். அவர்தான் கலக்கப் போவது யாரு புகழ் பாலா.

மிக மிக சாதாரண குடும்பப் பின்னணி கொண்டவர் பாலா. படிப்பில் சுட்டி அதேபோல திறமையிலும் கெட்டியானவர். தனது அயராத உழைப்பு, அருமையான திறமை இவற்றை மட்டுமே மூலதனமாக கொண்டு உயர்ந்த நிலைக்கு வரத் துடிப்பவர். சின்னத்திரையில் முதல் அடியை எடுத்து வைத்த அவர் அங்கு தனது கடினமான உழைப்பால் ஒரு அங்கீகாரத்தைப் பெற்று விட்டார். ஆனால் பெரிய திரையில் இன்னும் அவருக்கு முழுமையான ரத்தினக் கம்பளம் விரிக்கவில்லை. இருந்தாலும் விடாமல் போராடி வருகிறார்.

சிறிய அளவிலான உயர்வையும், ஒரு முன்னேற்றத்தையும் பார்த்திருந்தாலும் கூட அவரது செயல்கள் எல்லாம் மிகப் பெரிய ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது. தனது சக்திக்கு மீறி பலருக்கு உதவி செய்கிறார். தனது பணத்தைப் போட்டு ஆம்புலன்ஸ் வாங்கித் தந்து மலை வாழ் மக்களுக்கு அவர் உதவிய செய்தி அனைவரையும் அயர வைத்தது. பெரிய பெரிய நடிகர்கள் கூட இதுபோல செய்ததில்லை.



ஆனால் தனது ஆரம்ப காலத்தை மனதில் வைத்து எதையும் மறக்காமல் மக்களுக்கு அதைத் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் பாலா. மிகப் பெரிய விஷயமாக இதைப் பார்க்க வேண்டியுள்ளது. இப்போதும்  கூட  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தனது கையிலிருந்து பண உதவியைச் செய்து அதிர வைத்துள்ளார் பாலா.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களை நேரில் போய்ப் பார்த்த பாலா அவர்களுக்கு வெறுமனே ஆறுதல் மட்டும் கூறி விட்டு வரவில்லை. மாறாக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1000 பணத்தைக் கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம் பண உதவியை அவர் செய்துள்ளார். இதுகுறித்து பாலா கூறுகையில், எல்லோரையும் வாழ வைக்கும் ஊர் சென்னை. என்னையும் வாழ வைத்த ஊர் சென்னை. எனவே 200 குடும்பத்துக்கு தலா 1000 கொடுத்திருக்கேன். என்னாலான உதவி இது. 2015 வெள்ளத்தின்போதே மக்களுக்கு செய்ய ஆசைப்பட்டேன். ஆனா அப்ப என் கையில காசு இல்லை.. இப்ப கொஞ்சம் இருக்கு. அதான் செஞ்சிருக்கேன்.. நேத்தே செய்ய நினைச்சேன்.. ஆனால் ஏடிஎம்ல பணம் எடுக்க முடியலை.. அதான் இப்ப கொடுத்தேன் என்று கூறியுள்ளார் பாலா.

என்னா மனுஷன்யா இவர்!