கொரிய தமிழ் சங்கத்தின் .. விருது வழங்கும் விழா.. விருதாளர்களுக்கு சென்னையில் கெளரவம்

Aadmika
Dec 11, 2023,04:37 PM IST

சென்னை: கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடந்த வருடாந்திர விழாவில் விருது அளிக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் நடந்த விழாவில் கெளரவிப்பு செய்யப்பட்டது.


உலக அளவில் பிரபலமாக உள்ள முக்கியமான தமிழ்ச் சங்கங்களில் ஒன்று கொரிய தமிழ்ச் சங்கம். கொரிய தமிழ் சங்கத்தின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக தொண்டாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. 


இந்த ஆண்டும் விருது வழங்கும் விழா அக்டோபர் 29 ம் தேதி சியோலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்ச்சி கொரிய தமிழ் சங்கம் சார்பில் சென்னையில் டிசம்பர் 09ம் தேதி நடைபெற்றது. 




சென்னை மண்ணிவாக்கத்தில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பொது ஊடக பங்கேற்பாளர் காரை, The Infini leaders academy இயக்குனர் பொங்கல் புனிதா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கொரிய தமிழ் சங்க தலைவர் செ. அரவிந்த ராஜா, காரை செல்வராஜ், பொங்கல் புனிதா, சி.தாமோதரன், சரண்யா பாரதிராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். அனுராதா, வரவேற்புரை வழங்கியதுடன், நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.


கொரிய தமிழ்ச் சங்கம் பற்றிய அறிமுக உரையை செ.அரவிந்தராஜா ஆற்றினார். காரை செல்வராஜ் சிறப்பு அழைப்பாளர் உரையை ஆற்றினார். சென்னை மாணவி வேதிகா சுப்ரமணியன், தமிழர் பண்பாடு பற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆ.முகமது முகைதீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், மகாராஷ்டிரா தமிழ்ச் சங்கம் நாசிக்கிற்கு சிறந்த பொது நல அமைப்பு விருதும் அளிக்கப்பட்டது.




இதேபோல தி.ராமதாஸிற்கு சமூக சேவகர் விருதும், மதிவதனி பத்மநாதனுக்கு சமூக சேவகர் விருதும், பொங்கல் புனிதாவிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. அனுராதா நன்றியுரை நவில, தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு செய்யப்பட்டது.   




இவ்விழாவில் பல்வேறு தமிழ் சங்கங்களை சேர்ந்த அழைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் விருது பெற்றவர்களும், அவர்களின் சார்பாக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விருதினை விருந்தினர்கள், சங்கத்தின் தலைவர், தாயக தொடர்பு செயலாளர், பன்னாட்டுத் தொடர்பாளர் ஆகியோர் முன்னிலையில் பெற்றுக் கொண்டனர்.