கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்.. ஸ்டார்ட் டூ என்ட்.. கலகலப்புக்கும், காதலுக்கும் பஞ்சமே இல்லை!

Manjula Devi
May 03, 2024,04:49 PM IST

சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் புஜிதா பொன்னாடா நடித்த கொஞ்சம் காதல் கொஞ்சம்  மோதல் படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளதாம். இப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


பிரபல இயக்குனர் கே ரங்கராஜ் கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி, இயக்கி உள்ளார். இவர் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் காதல் படங்களைக் கொடுத்தவர். 80களில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். உன்னை நான் சந்தித்தேன், உதய கீதம், உயிரே உனக்காக, நினைவே ஒரு சங்கீதம் போன்ற சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை இயக்கியவர். இப்போது இளைஞர்களின் காதலைச் சொல்ல மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார். இடையில் சின்னத் திரையில் சில சீரியல்களையும் இவர் இயக்கியுள்ளார்.




இப்படத்தை ஸ்ரீ கணபதி பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் ‌முதல் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமாகியுள்ளது. தாமோதரன் ஒளிப்பதிவு செய்ய, இப்படத்திற்கு ஆர்கே சுந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த த்ரில்லர் காதல்  கதையாக உருவாகியுள்ளதாம்.




இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், புஜிதா பொன்னாடை நாயகியாகவும் நடித்துள்ளனர். இரண்டாவது நாயகனாக பரதன் மற்றும் இரண்டாவது நாயகியாக நிமி இம்மானுவேல் நடித்துள்ளார். பார்க்கவ், நம்பிராஜன், கே.ஆர் விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்ணுவா, ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.




இப்படம் பற்றி இயக்குனர் கே.ரங்கராஜ் கூறுகையில்,  வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதாணமல்ல என்பதை உணர்த்தும்  வகையில் வித்தியாமாக இருவேறு கோணங்களில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிகாக உண்மையான கிளைடர் பயன்படுத்தி முக்கியமான காட்சிகளை படம்பிடித்துள்ளோம். அந்த காட்சிகள் திரையில் பார்க்க மிகவும் பிரம்மாண்டாமாகவும், நகைச்சுவை கலந்த திரில்லராகவும் இருக்கும். அது மக்களிடையே பரபரப்பாக  பேசப்படும்.




படப்பிடிப்பு சென்னை மற்றும் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

விரைவில் இசைவெயீட்டு விழா நடத்தி படத்தை திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என கூறியுள்ளார்.