புதுச்சேரி "புரட்சி"த் தலைவர் கண்ணனின் சிஷ்யன்.. புஸ்ஸி ஆனந்த் பத்தி தெரிஞ்சுக்கலாமா கொஞ்சம்?

Manjula Devi
Feb 03, 2024,10:15 PM IST

சென்னை: விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருக்குப் பக்க பலமாக இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த், அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.. புஸ்ஸி ஆனந்த் அடிப்படையில் ஒரு அரசியல்வாதி. அதை விட முக்கியமாக பல முக்கியத் தலைவர்களின் தொண்டனாக, சிஷ்யனாக வலம் வந்தவர் தான் அவர்.


புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், புஸ்ஸி என்ற சட்டசபைத் தொகுதியைச் சேர்ந்தவர். அந்தத் தொகுதியில் 2016ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர்.  அந்தத் தேர்தலில் திமுக, பாஜக, தேமுதிக என முக்கியக் கட்சிகளை காலி செய்து வெற்றி பெற்றவர் ஆனந்த். பதிவான வாக்குகளில் 54 சதவீத வாக்குகளைப் பெற்று அதிர வைத்தவர். 


புதுச்சேரி மக்கள் காங்கிரஸின் தலைவர் யார் தெரியுமா.. மறைந்த தலைவர் கண்ணன்தான். இவர் ஒரு கோபக்கார அரசியல்வாதி.. அதேசமயம், குணத்திலும் வல்லவர். "புதுச்சேரியின் புரட்சித் தலைவர்" என்றுதான் இவரை செல்லமாக அழைப்பார்கள். மறைந்த மூப்பனாரின் சிஷ்யர். காங்கிரஸ், தமாகா என்று வலம் வந்த கண்ணன் பின்னர் ஆரம்பித்த கட்சிதான் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ்.




ஆனந்த்தும், ஆரம்பத்தில் திமுகவைச் சேர்ந்த அஷ்ரப்புடன் இணைந்திருந்தார். அவரது உதவியாளராக இருந்தவர். அஷ்ரப் பின்னர் காங்கிரஸில் இணைந்து  புஸ்ஸி தொகுதியில் பல வருடம்  எம்எல்ஏவாக இருந்தவர். அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஆனந்த்தும் ஒருவர். சூப்பராக ஸ்கெட்ச் போட்டு பணியாற்றக் கூடியவர்தான் ஆனந்த். 


விஜய்யின் ரசிகரான புஸ்ஸி ஆனந்த் நீண்ட காலமாக அவருடன் பயணித்து வருகிறார். ஆரம்பத்தில் புதுச்சேரி அளவில்தான் அவரது விஜய் ரசிகர் மன்றத் தொடர்பு இருந்தது. பின்னர் அது தமிழ்நாடு அளவிலும் பரவி இப்போது தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் பதவி வரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்திற்கான அத்தனை வேலைகளையும் அனுபவம் வாய்ந்த புஸ்ஸி ஆனந்த் பார்த்து வருவதால்தான் அவரது கட்சிப் பணிகள் சீரான முறையில் வடிவம் பெற்று வருவதாக சொல்கிறார்கள்.


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பணிகள் குறித்து புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது,  எங்கள் தலைவர் அறிக்கையில்  விவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறார். உங்களுக்கே தெரியும். அதன்படி நாங்கள் நடந்து கொள்வோம். முதன் முதலாக ஆரம்பித்திருக்கிறோம். இனி எல்லாவற்றையும் அதிகாரப்பூர்வமாக நாங்கள் நியமிப்போம். எதுவாக இருந்தாலும் தலைவரிடம் கேளுங்கள். 


தலைவரின் அனுமதி பெற்று தான் நாங்கள் எதுவாக இருந்தாலும் பேசுவோம். சொல்லுவோம். தளபதி ரசிகர்கள் எல்லோரும் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரசிகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், மிகச் சிறப்பாக தமிழக வெற்றி கழகத்தை வரவேற்கிறார்கள் என்றார். மேலும் கட்சிக்கு மக்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாக செய்தியாளர்கள் சொன்னபோது, நல்லா இருக்கா.. நல்லா இருந்தா.. மக்களுக்கு அதன்படி செய்வோம்.. என சிரித்துக் கொண்டே கூறினார் புஸ்ஸி ஆனந்த்.