கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்று முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வந்துள்ளது: அமைச்சர் சிவசங்கர்

Meenakshi
Jan 30, 2024,11:20 AM IST

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்  இன்று முதல் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.


கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இன்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது. 


இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் இன்றிலிருந்து முழுமையாக செயல்படுத்தப்படுகிறது. அதனால் கோயம்பேட்டில் இருந்து இயங்கி வந்த அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் 80% பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் இருந்தும் 20% மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்படுகின்றன.




மாதவரத்தில் இருந்து  தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 20% பேருந்துகளை மாதவரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சுதர்சனம் தலைமையில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. வட சென்னைபகுதியை சேர்ந்த மக்கள் தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கு சிரமப்படுகிறோம் என்ற கருத்தை எடுத்து வைத்து வந்த நிலையில், முதல்வர் அவர்கள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க உத்தரவிட்டுள்ளார். 


இங்கிருந்து திருச்சிக்கு 18 நடைகளும், சேலத்திற்கு 17 நடைகளும், விருதாச்சலத்திற்கு 6 நடைகளும், கள்ளக்குறிச்சி 16 நடைகளும், விழுப்புரம் 16 நடைகளும், கும்பகோணம் 14 நடைகளும், சிதம்பரம் ஐந்து நடைகளும், நெய்வேலி 11 நடைகளும், புதுச்சேரியை வழியாக கடலூருக்கு 5 நடைகளும், புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு 10 நடைகளும், திருவண்ணாமலை வழியாக செஞ்சி வழியாக 22 நடைகளும்,  போளூர் வந்தவாசிக்கு 20 நடைகளும் என மொத்தம் 160 நடைகள் இயக்கப்பட இருக்கின்றன.


ஏற்கனவே இங்கிருந்துதான் திருப்பதிக்கு 90 நடைகள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளதால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல், இங்கிருந்து அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்ல வாய்ப்பாக அமையும். மக்கள் சிரமம் இல்லாமல் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மக்களுடைய அரசு பேருந்துகளை பயன்படுத்தும் நிலை தற்பொழுது கூடி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.