ஆத்தாடி.. என்னாங்க இது.. ஆடி காரில் வந்து .. கீரை விற்கும் சேட்டன்!

Su.tha Arivalagan
Sep 30, 2023,04:19 PM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு விவசாயி ஆடி காரில் வந்து இறங்கி, கீரை விற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.


வேட்டி, டீ சர்ட்டில் பார்க்க சிம்பிளாக இருக்கும் அந்த நபர், ஆடி காரை படு ஒய்யாரமாக ஓட்டி வருகிறார். சாலையோரமாக காரை பார்க் செய்து விட்டு இறங்கும் அவர் முதலில் தான் கட்டியிருந்த வேட்டியை படபடவென்று அவிழ்க்கிறார்.. "நோ டென்ஷன்".. உள்ளே பெர்முடா போட்டிருக்கிறார்.




அதன் பிறகு சாலையோரமாக பெரிய தார்ப்பாயை விரித்து தான் கொண்டு வந்திருந்த கீரைக் கட்டுகளை எடுத்து பரப்பி வைக்கிறார். அதன் பின்னர் வியாபாரம் தொடங்குகிறது. வியாபாரத்தை முடித்துக் கொண்டு தார்ப்பாயை எடுத்து வண்டியில் வைத்து மறுபடியும் வேட்டியைக் கட்டிக் கொண்டு டாடா பை என்று சிரித்தபடி கிளம்பிச் செல்கிறார்.


இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வந்தது முதல் இவர் பிரபலமாகி விட்டார். வீடியோவும் வைரலாகி விட்டது. இவரது பெயர் சுஜித். இன்ஸ்டிகிராமில் இவர் வெரைட்டி பார்மர் என்ற பெயரில் பிரபலமாக இருக்கிறார். இவரே கீரையை விளைவிக்கிறார். அதை தினசரி காலையில் அறுத்து எடுத்து கட்டுக்களாக மாற்றி விற்பனை செய்கிறாராம். இவரது காரின் விலை ரூ. 44 லட்சமாகும்.


கீரையை கொண்டு வர ஆட்டோ ஒன்றை பயன்படுத்துகிறார். கீரை ஆட்டோவில் வந்து இறங்க, இவர் ஆடி காரில் வந்து இறங்கி வியாபாரத்தைப் பார்க்கிறார்.  இவருக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிகின்றன.




ஆனால் அந்த வீடியோவுக்கு ஒருவர் இப்படி கமெண்ட் போட்டுள்ளார். "நான் போய் முதல்ல என்னோட ஆடி காரை விக்கிறேன்... அதுக்குப் பிறகு காய்கறி வாங்கி விக்கிறேன்"


செம தமாஷ்ல.. பட்.. உழைப்பு உயர்வு தரும் என்பதற்கு சுஜித் நல்ல உதாரணம்தான்.. ஆரம்பத்திலிருந்தே அவர் ஆடி காரில் வந்திருக்க வாய்ப்பில்லை. கீரை விற்றும், கடுமையாக உழைத்தும்தான் ஆடி காரை வாங்கியிருக்க முடியும்.. ஆடி காருக்கு மாறிய பிறகும் கூட தனது அந்தஸ்தைப் பெரிதாக நினைக்காமல் அடித்தளத்தை மதிக்கிறார் இல்லையா.. அதுதான் பெருசு.. சூப்பர்ப் சேட்டா!