கேரளாவுக்கா போகப் போறீங்க.. வெயில் மண்டையைப் பொளக்குதாம்.. !

Su.tha Arivalagan
Apr 18, 2023,02:34 PM IST
திருவனந்தபுரம்: கேரளாவில் பகல் நேர வெப்ப நிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் எப்போதும் குளுகுளுவென காணப்படும் கேரளா தற்போது கசகசவென வியர்த்துக் கொட்டுகிறதாம்.

வழக்கமாக கோடைகாலத்தில் எல்லோரும் கேரளாவுக்குப் படையெடுப்பார்கள். காரணம், இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில்  எப்போதும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதே. ஆனால் இந்த முறை எல்லாம் தலைகீழாக உள்ளது. அங்கு வெயில் கொளுத்தி வருகிறதாம். கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. சிறு மழை கூட கேரளாவில் எங்குமே பதிவாகவில்லையாம். பகல் நேர வெப்பநிலை இப்போதைக்குக் குறையாது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




கடலுக்கும், நிலத்துக்கும்  இடையே பரவலான காற்று இல்லாத காரணத்தால் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக இருக்கிறது. இதனால் காலை நேரத்திலேயே வியர்த்துக் கொட்டுகிறதாம். வீட்டுக்குள்ளும் இருக்க முடியவில்லை. வெளியிலும் தலை காட்ட முடியாமல் கேரள மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.  இதை விட கொடுமையாக, கேரளாவில் புற ஊதாக் கதிர்வீச்சும் வழக்கத்தை விட 12 யூனிட் அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.   

வரும் நாட்களில் பாலக்காடு, கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரிக்குமாம்.  இந்த முறை கோடை மழையானது 38 சதவீதம் குறைந்தே காணப்படுகிறது. அதேசமயம், வயநாடு உள்ளிட்ட சில பகுதிகளில் திங்கள்கிழமை வரை பரவலாக அவ்வப்போது மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.