மோசமான வயநாடு நிலச்சரிவு.. தோண்டத் தோண்ட உடல்கள்.. பலி எண்ணிக்கை 107 ஆக உயர்வு!

Meenakshi
Jul 30, 2024,04:17 PM IST
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள சூரல்மலை பகுதியில் தொடர்  மழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாட்டில் ஒரே நாளில் தொடர்ந்து 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக அப்பகுதிக்குள் காட்டாறு வெள்ளம் புகுந்ததால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வயநாடு சூரல் மலை  பகுதியில் இடைவிடாது தென்மேற்கு பருவ மழை பெய்ததினால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிங்களில் மண்ணில் புதைந்தன. 700க்கு மேற்பட்டவர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் எதுவும் தெரிய வில்லை. 

தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த இடிபாடுகளில் 400க்கு மேற்பட்ட குடும்பங்கள் சிக்கித்தவித்து வருகின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரு பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



மீட்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே இருந்த மீட்பு குழுக்களும் சூரல்மலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி வயநாடு சூரல்மலை பகுதியில் சிக்கி உயரிழந்தவர்கள் 107 பேர் என தெரியவந்துள்ளது.மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்து வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. 

அடையாளம் தெரியாத சடலங்களை அடையாளம் காணும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. பலர் மீட்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  கேரள மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 80860 10833, 96569 38689 ஆகிய உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவத்திற்கு வயநாடு தொகுதி முன்னாள் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என நான் நம்புகிறேன். 

கேரள முதல்வருடனும், வயநாடு மாவட்ட ஆட்சியருடனும் பேசியுள்ளேன். அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு வேண்டியுள்ளேன். மத்திய அமைச்சர்களுடனும் பேசி வயநாடுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வலியுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். நாளை ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் வயநாடு வருகின்றனர்.