பெற்ற மகளை... 8 மாதமாக சீரழித்த நபருக்கு.. 3 ஆயுள் தண்டனை!

Su.tha Arivalagan
Jan 31, 2023,09:18 AM IST
மலப்புரம்: பெற்ற மகள் என்று கூட பாராமல் சிறுமியை கிட்டத்தட்ட 8 மாத காலம் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த  தந்தை என்ற மிருகத்திற்கு 3 ஆயுள் தண்டனை கொடுத்துள்ளது கேரள நீதிமன்றம். அவரது மீதமுள்ள வாழ்நாளை சிறையிலேயே கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.



கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில்தான் இந்தக் கொடுமை நடந்துள்ளது.  மஞ்சேரி விரைவு நீதிமன்ற சிறப்பு நீதிபதி ராஜேஷ் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.  இந்த நபருக்கு ரூ. 6.6 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் மாதம் சம்பந்தப்பட்ட சிறுமி (அப்போது அவருக்கு வயது 15) தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை அட்டென்ட் செய்து வந்தார். அந்த மாதத்தில் முதல் முறை தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான் இந்த முட்டாள்.

தந்தையின் செயலைப் பார்த்து அதிர்ந்து தடுக்க முயன்றுள்ளார் மகள். ஆனால் உனது தாயைக் கொன்று விடுவேன் என்று மிரட்டி தனது காரியத்தை சாதித்திருக்கிறார் அந்த நபர்.  அதன் பின்னர் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை பல முறை இந்த அசிங்கத்தை அரங்கேற்றியிருக்கிறார். இவர் ஒரு முன்னாள் மதரசா ஆசிரியர் என்பதுதான் கொடுமையானது. நல் வழியைப் போதிக்க வேண்டிய நபரே இப்படி தீய வழியில் போயுள்ளார்.

நவம்பர் 2021 முதல் சிறுமி பள்ளிக்குப் போக ஆரம்பித்திருக்கிறார். அப்போது அவருக்கு வயிற்றில் வலி ஏற்படவே டாக்டர்களிடம் கூட்டிப் போயுள்ளனர். ஆனால் என்ன காரணம் என்பது டாக்டர்களுக்குத் தெரியவில்லை. 2022 ஜனவரியில் மீண்டும் வலி ஏற்படவே டாக்டர்களிடம் போனபோது அப்போது நடந்த பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அப்போதுதான் தனது தந்தையின் ஈனச் செயலை விவரித்துள்ளார் சிறுமி.

இதையடுத்து போலீஸாருக்குப் புகார் போய், போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர். டிஎன்ஏ சோதனையில் சிறுமியை கர்ப்பமாக்கியது அவரது தந்தைதான் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் சிறுமிக்கு அபார்ஷன் செய்யப்பட்டது.  டிஎன்ஏ சோதனை முடிவுகளும், சிறுமியின் தாயார் கொடுத்த வாக்குமூலமும்தான் இந்த நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்க முக்கியக் காரணம்.