வயநாடு நிலச்சரிவு.. பிரியங்கா காந்தியுடன்.. விரைந்து வருகிறார்.. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

Manjula Devi
Jul 30, 2024,12:23 PM IST

வயநாடு:   வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் மக்கள் பெரும் துயரில் மூழ்கியுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை  பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்க எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டிற்கு விரைந்து வருகிறார். 


தென்மேற்கு பருவ மழை அதி தீவிரமடைந்ததால் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை  காரணமாக வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலை என்ற இடத்தில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அப்பகுதிகளில் வசித்து வந்த 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கின. இதனைத் தொடர்ந்து மீட்பு படை வீரர்கள் தொடர்ந்து போராடி 50க்கும் மேற்பட்டோரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  


இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இது மட்டுமல்லாமல் இன்றும் அதிக கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட கூடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் பலி  எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 




மண்ணில் புதைந்த பள்ளிக்கூடம்:


வெள்ளரி  மலை என்ற இடத்தில்  உள்ள ஜி.வி பள்ளி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தப் பள்ளி முற்றிலும் மண்ணில் புதைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வயநாடு நிலச்சரிவு காரணமாக பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் நிவாரணத் தொகையும், காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணத் தொகையும் வழங்க உத்தரவிட்டார். அதேபோல் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து நிலச் சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்க தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளதாக அறிவித்திருந்தார்.


ராகுல் காந்தி வருகிறார்:


இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள முதல்வர் பிரணாயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வயநாடு நிலச்சரிவு குறித்து கேட்டறிந்து ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வயநாடு மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நிலையில்  வயநாடு தொகுதியின் முன்னாள் எம்பியான ராகுல் காந்தியும், அந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ள அவரது தங்கை பிரியங்கா காந்தியும் வயநாடு நிலச்சரிவை நேரில் பார்வையிட விரைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் உள்ளார் ராகுல் காந்தி.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். அதேசமயம், ரேபரேலி தொகுதியிலும் அவர் வென்றதால் வயநாட்டை ராஜினாமா செய்து விட்டார். அங்கு பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.