தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பான வசதிகள்.. முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை.. கேரள அரசு ஓ.கே!

Meenakshi
Dec 14, 2023,02:52 PM IST
சென்னை: தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும், பாதுகாப்பும் செய்து தர முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்றுள்ள கேரள அரசு அதுதொடர்பாக ஆவண செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் கேரளாவுக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். எப்போதும் இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் தற்பொழுது அதிகரித்துள்ளது. ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் சாமி தரிசனம் செய்ய , ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் புக் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் செய்து தர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அதை ஏற்று கேரள மாநில அரசின்  தலைமைச் செயலாளர் உறுதி அளித்துள்ளார். 



இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ள பக்தர்கள் அடிப்படை வசதிகளும் பாதுகாப்பும் இன்றி மிகவும் சிரமப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை, கேரள மாநில தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு தமிழ்நாட்டிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து உதவிகளையும் ஏற்பாடு செய்து உதவிட கேட்டுக் கொள்ளுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

அதன்படி தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா  கேரள மாநில தலைமைச் செயலாளர் வி. வேணுவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இதுதொடர்பாக கோரிக்கை வைத்திருந்தார். 

தமிழ்நாடு தலைமைச் செயலர் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் வைத்த கோரிக்கையை ஏற்ற கேரள மாநில தலைமைச் செயலாளர் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் பாதுகாப்பினை உறுதி செய்யவும் கேரள மாநில அரசு சார்பில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.