No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

Meenakshi
Feb 04, 2025,07:10 PM IST

திருவனந்தபுரம்: அங்கன்வாடியில் தரப்படும் சத்துணவில் உப்புமாவிற்கு பதிலாக பிரியாணியும் வறுத்த சிக்கனும் தான் கொடுக்க வேண்டும் என ஷங்கு என்று சிறுவன் வீடியோ மூலம் கேரளா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.  இதைக் கேட்ட அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், இதுகுறித்து கண்டிப்பாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.


அனைத்து மாநிலங்களிலும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றனர். அங்கன்வாடிகளில்  ஒன்று முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள்  பராமரிக்கப்படுகின்றனர். அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு தினமும் ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் உணவில் உப்புமாவும் வழங்கப்படுகிறது. 



இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஷங்கு என்ற சிறுவன் பேசிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வைரலாகியது. ஷங்கு தனது தாயாரிடம் வீட்டில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சி அது. அந்த வீடியோவில், தினமும் அங்கன்வாடியில் உப்புமா தான் வழங்கப்படுகிறது என்றும், அதற்கு பதிலாக பிர்னாணி (பிரியாணி) மற்றும் பொறிச்ச கோழி வேண்டும் என்று கேட்டிருக்கும் வீடியோ வெளியானது. அந்த வீடியோவை ஷங்குவின் தாயார் அதனை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். 


தற்போது அந்த வீடியோ பரவி வைரலாகி வருகிறது. அதுமட்டும் இன்றி அந்த வீடியோ கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கும் சென்றுள்ளது. இந்நிலையில், அந்த வீடியோவிற்கு பதிலளிக்கும் விதத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக் கொண்டு மெனு மறு ஆய்வு செய்யப்படும். குழந்தைக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரளா அரசாங்கம் அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேம்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஷங்குவின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும். அங்கன்வாடி மெனு மாற்றப்படும் எனக் கூறியுள்ளார்.


ஆமா.. இந்த உலகம் உப்புமாவைப் பார்த்தால் இப்படி பீதி ஆகி ஓடுது..  உங்களுக்கு தெரிஞ்சா கமென்ட்ல சொல்லுங்களேன்!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்