எந்த எச்சரிக்கையும் எங்களுக்கு வரவில்லை.. அமைச்சர் அமித்ஷாவுக்கு.. முதல்வர் பினராயி விஜயன் பதில்

Su.tha Arivalagan
Jul 31, 2024,07:55 PM IST

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு தொடர்பாக மத்திய அரசுக்கும், கேரள முதல்வருக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.


ஒரு வாரத்திற்கு முன்பே அதி கன மழை தொடர்பாக கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதை கேரள அரசு புறம் தள்ளியுள்ளது. குஜராத்துக்கு இப்படிதான் சூறாவளி தொடர்பாக முன்னெச்சரிக்கை விடுத்தோம். அதை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொண்டதால் ஒரு பசு கூட சாகாமல் காப்பாற்றப்பட்டது என்று அமித் ஷா கூறியிருந்தார்.


இதுதொடர்பாக ராஜ்யசபாவில் பேசும்போது, அவர் மேலும் கூறுகையில், ரூ. 2000 கோடி செலவில் முன்கூட்டியே இயற்கை சீற்றங்கைக் கணிக்கும் அறிவிக்கும் முறையை 2014ம் ஆண்டு ஏற்படுத்தினோம். ஜூலை 23ம் தேதி கேரள அரசுக்கு மிக மிக கன மழை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  அதாவது தற்போதைய சம்பவத்திற்கு 7 நாட்களுக்கு முன்பு இதைச் சொல்லியிருந்தோம். அதன் பிறகு ஜூல 24, 25 ஆகிய நாட்களிலும் கன மழை குறித்து எச்சரித்திருந்தோம். 26ம் தேதி மிக மிக கன மழை பெய்யும் அது 20 செமீ அளவுக்கு இருக்கும். நிலச்சரிவுக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரித்திருந்தோம் என்று கூறியிருந்தார் அமித்ஷா.




இதற்கு தற்போது முதல்வர் பினராயி விஜயன் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், காலநிலை மாற்றம் குறித்து மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில், இப்படி பெய்தது போல மிக மிக கன மழையை நாம் எதிர்கொண்டிருந்தோமா? இல்லை. காலநிலை மாற்றத்தை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து நாம் யோசிக்க வேண்டும்.


இதுபோன்ற இயற்கைச் சீற்றத்தின்போது அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு விட்டு தப்பித்துக் கொள்ள முயலக் கூடாது. பொறுப்பை தட்டிக் கழிக்கக் கூடாது.  இது பழி சுமத்தும் நேரம் இல்லை என்று நான் கருதுகிறேன். கேரளாவில் மிக மிக கன மழை பெய்யும் என்று எங்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. வயநாடு மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்று கூறியுள்ளார் பினராயி விஜயன்.