கேரளா குண்டுவெடிப்பு.. தலைநகர் டெல்லி, மும்பையில் உச்சகட்ட பாதுகாப்பு

Aadmika
Oct 29, 2023,03:59 PM IST

டெல்லி : கேரளா வழிபாட்டு தலத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


கேரளாவின் எர்ணாகுளத்தில் இன்று காலை வழிபாட்டு தலத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வெடித்தது. மூன்று முறை குண்டுவெடித்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கு காரணமான குற்றவாளிகளை தேடும் பணி தீரவிமாக நடந்து வருகிறது. குண்டு வெடிப்பு குறித்த விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதவையடுத்து டில்லி மற்றும் மும்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பண்டிகை காலம், கிரிக்கெட் போட்டிகள் மற்றும் கேரள குண்டுவெடிப்பு போன்ற காரணங்களால் உச்சகட்ட உஷார் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக மும்பை போலீசாரும் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் போர் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 




டெல்லி சிறப்பு காவல் படையினரும் உளவுத்துறையை தொடர்ந்து கொண்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். 


கேரளாவில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 36 பேர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 27 ம் தேதி துவங்கி 3 நாட்களாக இந்த பிராராத்தனை கூட்டம் நடந்து வந்துள்ளது. கூட்டத்தின் கடைசி நாளான இன்று, பிரார்த்தனை துவங்கிய சிறிது நேரத்திலேயே குண்டுவெடிப்பு நடத்தப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.