"ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி".. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Manjula Devi
Jan 27, 2024,06:49 PM IST

டெல்லி: டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க மத்தியில் ஆளும் பாஜக அரசு சதி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 7 எம்எல்ஏக்களுக்கு தலா 25 கோடி லஞ்சம் வழங்க பேரம் பேசப்பட்டதாகவும் அடுக்கடுக்கான பல பரபரப்பு புகார்களை அடிக்கியுள்ளார்.

 

ஆம் ஆத்மி  கட்சி ஊழலுக்கு எதிராக இந்திய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது. இக்கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் செயல்படுகிறது.  டெல்லியில்  கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில்தான் ஆட்சி நடத்தி வருகிறார் கெஜ்ரிவால்.


சமீப காலமாக கெஜ்ரிவால் அரசுக்கு பாஜக அரசு நெருக்கடி தருவதாக முதல்வர் கெஜ்ரிவால் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மேலும் மதுபான வழக்கில் கெஜ்ரிவால் அரசின் தலைவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படுவார்கள் எனவும் பாஜக தரப்பில் கூறுகின்றனர். 




இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்‌ தனது ட்விட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க மத்திய பாஜக அரசு சதி செய்வதாக குற்றம்சாட்டி நீளமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என பாஜக அரசு சதி செய்கிறது. ஏற்கனவே உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் மீது உள்ள மதுபான வழக்கை வைத்து மிரட்டி கொண்டிருக்கிறார்கள்.


இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்து விடுவோம் என பாஜக அரசு மிரட்டல் விடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அமலாக்கத் துறையினால் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ஆம் ஆத்மி ஆட்சியைக் கவிழ்ப்போம். உடைப்போம் என கூறுகின்றனர். 


அண்மையில் பாரதிய ஜனதா கட்சி, ஆம்ஆத்மி கட்சியின் 21 எம்எல்ஏக்களுடன் ரகசிய பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உள்ளனர்.  ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் தலா 25 கோடி லஞ்சம் வழங்கப்படுவதாக பேசி உள்ளனர். இதில் ஏழு எம்எல்ஏக்கள் பேரத்துக்கு அடிபணிய முடியாது என மறுத்து விட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த 9ஆண்டு காலமாக தங்களது அரசை கவிழ்க்க  மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது. அனைத்து எம்எல்ஏக்களும் பலமாக ஒன்றுபட்டு இருக்கிறோம். பாஜகவின் உள்நோக்கம் தோல்வியில் முடியும் என பதிவிட்டுள்ளார்.