ஒட்டிய சம்மனைக் கிழிக்கச் சொன்னது நான்தான்.. என்னைக் கைது பண்ணுங்க.. கயல்விழி சீமான்

Su.tha Arivalagan
Feb 28, 2025,07:51 PM IST

சென்னை: நைட்டியில் இருந்ததால், வீட்டுக்கு வெளியே  ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து எடுத்துட்டு வாங்க படிக்கிறேன் என்று நான்தான் டிரைவர் சுபாகரிடம் கூறினேன். கிழிக்கச் சொன்னது நான்தான். என்னைத்தானே நீங்க கேட்டிருக்க வேண்டும். முடிந்தால் என்னைத்தானே நீங்க கைது பண்ணிருக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.


சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டில் நேற்று நடந்த பெரும் களேபரம் குறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கினார் கயல்விழி . அவரது பேட்டியிலிருந்து:




உள்நோக்கத்தோடுதான் நேற்று போலீஸார் வந்தனர். திட்டமிட்டுதான் எல்லாவற்றையும் செய்துள்ளனர். சம்மனை ஒட்டி விட்டு அவர்கள் போன பிறகு நான்தான் அதை படிக்க விரும்பினேன். ஆனால் நைட் டிரஸ்ஸில் நான் இருந்ததாலும், வெளியில் மீடியா உள்ளிட்டோர் கூடியிருந்ததாலும் சங்கடப்பட்டுக் கொண்டு சம்மனை கிழித்து எடுத்து வருமாறு நான் தான் சுபாகரிடம் கூறினேன். அதன்படிதான் அவர் கிழித்து எடுத்து வந்தார். நான்தான் சம்மனைக் கிழிக்கச் சொன்னேன். என் மீதுதானே நீங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 


அதை விட்டுட்டு வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக புகுந்து அமல்ராஜ் அண்ணனை அடித்துள்ளனர். மீடியாவுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். சம்பவம் நடந்த இடத்தில் எங்களிடம் சிசிடிவி கவரேஜ் இல்லை. அந்த இடத்தில் நடந்ததை மீடியாதான் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இன்ஸ்பெக்டர் பிரவீன்தான், அண்ணனைத் தள்ளிக் கொண்டு வந்து அடித்துள்ளார். மப்டியில் வந்த போலீஸாரும் அவரை அடித்துள்ளனர். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இது என்ன மாதிரியான நடவடிக்கை.. வீட்டுக்கு வெளியே ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததற்கு இப்படியா நடப்பீர்கள். அதை எதற்காக ஒட்டினீர்கள்.. நாங்கள் பார்க்க வேண்டும் என்பதற்குத்தானே.. இல்லை ஊரெல்லாம் பார்த்து எங்களுக்கு அவமரியாதை ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் ஒட்டினீர்களா.


சம்மன்களை ஒட்டி விட்டுப் போக தனியாக நோட்டீஸ் போர்டு.. சீமான் வீட்டில் புதிய ஏற்பாடு!


அமல்ராஜ் அண்ணன் ஒரு எக்ஸ் சர்வீஸ்மேன். அவரை ஒரு குப்பை போல தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றார்கள். நான் முழுநசாக என்ன நடந்தது என்று தெரியாமல், பிரவீன் சட்டை கசங்கியிருப்பதைப் பார்த்து அண்ணன்தான் ஏதோ கோபத்தில் செய்து விட்டாரோ என்று நினைத்து அவரிடம் சாரி கேட்டேன். பிறகுதான் தெரிந்தது அண்ணன் மேல் தவறு இல்லை என்று. விசாரணைக்கு சீமான் முழுமையாக ஒத்துழைத்துள்ளார். ஏற்கனவே காவல் நிலையத்தில் ஆஜராகி 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார். எழுதியும் கொடுத்துள்ளார். அப்படியும் விடாமல் பாலியல் வழக்கு என்று கூறி கூறி அவரை அசிங்கப்படுத்த முயல்கிறார்கள். இதைத் திட்டமிட்டு செய்கிறார்கள்.


அமல்ராஜ் அண்ணனும்,  சுபாகரையும் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லாமல் வழியில் பார்க்கில் வைத்து அடித்துள்ளனர். அத்தோடு காவல் நிலையத்தில் வைத்து இரும்பு ராடில் துணியைச் சுற்றி அடித்துள்ளனர். இதை மாஜிஸ்திரேட்டிடம் இருவரும் நேற்று கூறியுள்ளனர். இதுகுறித்து நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார் கயல்விழி சீமான்.