"சினிமாவிலும்.. அரசியலிலும் டூப் அறியாதவர்.. கேப்டன் விஜயகாந்த்".. வைரமுத்து வேதனை!

Meenakshi
Dec 28, 2023,02:43 PM IST

சென்னை: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் இன்று காலை காலமானார். திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்களும் விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள்.


கவிஞர் வைரமுத்து விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.




எரிமலை எப்படிப் பொறுக்கும்

என்ற என் பாடலுக்கு

உயிர்கொடுத்த கதாநாயகன்

உயிரிழந்து போனார்

திரையில் நல்லவர்

அரசியலில் வல்லவர்

சினிமாவிலும் அரசியலிலும்

டூப் அறியாதவர்


கலைவாழ்வு பொதுவாழ்வு

கொடை மூன்றிலும்

பாசாங்கு இல்லாதவர்

கலைஞர் ஜெயலலிதா என

இருபெரும் ஆளுமைகள்

அரசியல்செய்த காலத்திலேயே

அரசியலில் குதித்தவர்

எதிர்க்கட்சித் தலைவர் என்ற

உயரம் தொட்டவர்

உள்ளொன்று வைத்துப்


புறமொன்று பேசாதவரை

நில்லென்று சொல்லி

நிறுத்திவிட்டது காலம் வருந்துகிறேன்


கண்ணீர் விடும்

குடும்பத்தா்க்கும்

கதறி அழும்

கட்சித் தொண்டர்களுக்கும்

என் ஆழ்ந்த இரங்கலைத் 

தெரிவித்துக் கொள்கிறேன். 


என்று வைரமுத்து தனது ட்வீட் போட்டுள்ளார்.


கவிஞர் அருண் பாரதி இரங்கல்




மதுரை மாகாளிபட்டியிலிருந்து 

மாநகரம் சென்னைக்கு வந்த 

கருப்பு சூரியன் 


அரசியலில் ஆளுமைமிக்க தலைவர்கள் இருக்கும் போதே களத்தில் குதித்த 

நெருப்பு சூரியன் 


சினிமாவில் 

அரசியல் செய்யத் தெரியாதவர் 

அரசியலில் 

சினிமாபோல நடிக்கத் தெரியாதவர் 


கதாநாயகனாக தோன்றிய 

முதல் படம் மட்டுமல்ல 

இருட்டிலிருந்த பலரை 

வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததில் 

இவர் ஓர் அகல்விளக்கு 

வெளிச்சம் குறையாத பகல்விளக்கு 


தவிக்கும் நெஞ்சங்களின் தவிப்பறிந்து 

தர்மங்கள் செய்ததால் 

இவர் ஏழை ஜாதி 


அரிசி ஆலையில் 

பணியாற்றியதாலோ என்னவோ 

பலரின் பசியறிந்து பசிதீர்த்த 

பாமர ஜோதி 


புரட்சிக் கருத்துகளை 

திரையில் விதைத்த 

புரட்சித் தலைவரின் 

இரண்டாம் பாதி 


முத்தமிழ் அறிஞர் 

கலைஞரை நேசித்து 

அன்பு பாராட்டியதில் 

இவர் நெஞ்சுக்கு நீதி 


விஜயகாந்த் - இது 

கடவுள் கொடுத்த கொடைக்கு 

காலம் வைத்த பேரு 


கோடான கோடி மக்களின் 

நினைவுப் புத்தகத்தில் 

இவர் எப்போதும் 

நிரந்தர வரலாறு