"மோடிஜி.. எங்க ஸ்கூல் அழுக்கா இருக்கு.. புதுசா கட்டித் தாங்க மோடிஜி".. உருக வைத்த காஷ்மீர் சிறுமி!

Su.tha Arivalagan
Apr 15, 2023,04:15 PM IST
கத்துவா, ஜம்மு காஷ்மீர்: பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீரைச் சேர்ந்த சிறுமி விடுத்துள்ள வேண்டுகோள் சமூக வலைதளங்களை பரபரப்பாக்கியுள்ளது.

அந்த சிறுமியின் பெயர் சீரத் நாஸ். ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியைச் சேர்ந்த இந்த குட்டிப் பாப்பா ஒரு செல்போன் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

சீரத் நாஸ் பள்ளிக் கூட வளாகத்தில் இருந்தபடி இந்த வீடியோவை எடுத்துள்ளார். முதலில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் சீரத், பின்னர் பள்ளி வளாகத்திற்குள் சென்று ஒவ்வொரு பகுதியாக காட்டுகிறார். தனது பள்ளிக்கூடக் கட்டடம் எவ்வளவு பழையதாக இருக்கிறது, மோசமாக இருக்கிறது.  உட்காரக்கூட முடியவில்லை. டிரஸ்ஸெல்லாம் அழுக்காகி விடுகிறது. டாய்லெட்டைப் பாருங்கள், மிகவும் மோசமாக இருக்கிறது.



இப்படி இருந்தால் நாங்கள் எப்படிப் படிப்போம். நீங்கள் நாட்டு மக்கள் கூறுவதையெல்லாம் கேட்கிறீர்கள். நாட்டுக்கு நிறைய செய்கிறீர்கள்.. எங்க ஸ்கூலையும் பாருங்கள். நாங்கள் சொல்றதையும் கேளுங்க. எங்களுக்காக நல்ல ஸ்கூலைக் கட்டிக் கொடுங்கள். டிரஸ்ஸெல்லாம் அழுக்காக்கிட்டு வர்றியே என்று அம்மா தினமும் திட்டுகிறார். அந்த அளவுக்கு இங்கு தரையெல்லாம் அழுக்காக உள்ளது.  நல்ல ஸ்கூல் இருந்தால் அம்மா திட்ட மாட்டாங்க  இல்லையா.. நாங்களும் நல்லா படிப்போம்ல.. அதனால நல்ல ஸ்கூல் கட்டிக் கொடுங்க மோடிஜி என்று அந்தச் சிறுமி பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

கை தேர்ந்த நிருபர் போல வெகு அழகாக அந்த சிறுமி பேசுகிறார். கேமராவை அழகாக செல்பியாகவும், பின்னர் கட்டடத்தைப் படம் பிடித்தும் அசத்தலாக செய்துள்ளார். கடைசியில் முடிவுரையாகவும் அவர் பேசி மோடிஜி நல்ல ஸ்கூலைக் கட்டித் தாங்களேன் என்று உரிமையுடன் அவர் கேட்டுள்ளது உருக வைப்பதாக உள்ளது.

பார்க்கலாம்.. மோடிஜி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை.