அம்மா ஞாபகம் வந்துருச்சு.. சொந்த ஊரில் நா தழு தழுக்க கண்ணீருடன் பேசிய ஜோதிமணி!

Meenakshi
Apr 05, 2024,05:20 PM IST

கரூர்:  கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சிட்டிங் எம்.பியான ஜோதிமணி பிரச்சாரத்தின் போது தனது தாயை நினைத்துக் கலங்கி கண்ணீர் விட்டதால் கூட்டத்தினர் அவருக்கு ஆறுதல் கூறினர்.


மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.  அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




கரூர் லோக்சபா தொகுதியில்  போட்டியிடும் சிட்டிங் எம்.பியான ஜோதிமணி,  அவரது சொந்த கிராமமான பெரியதிருமங்கலத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். ஜோதிமணி பேசுகையில், 300, 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் இன்றைக்கு 1200, 2000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலைமைக்கு  வந்துள்ளது. இந்த மாதிரியான நிலைமை மாற வேண்டும் என்றால் கை சின்னத்தில் ஓட்டு போட வேண்டும்.




உங்களுக்கு எல்லாம் என்னை நல்லா தெரியும். இதைச் சொல்லி அதை சொல்லி நான் ஒட்டு கேட்க வேண்டியது இல்ல. நான் 4 வருசம் 9 மாதம் 24 நாள்  நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கேன். என்னால் முடிந்த வரைக்கு சிறப்பாக பணி ஆற்றி இருக்கேன். பல நேரத்துத்துல நம்ம ஊருக்கு ராத்திரியில தான் வந்திருக்கேன். அந்த அளவுக்கு பணிச்சுமை இருக்கு. 


அம்மா இருந்திருந்தாங்கனா அந்த பணிச்சுமை என்று நா தழு தழுத்த குரலில் கண்ணீருடன் பேசிய போது பேச்சை நிறுத்திய ஜோதிமணிக்கு, நாங்கெல்லாம் உங்களுக்கு அம்மாதான் அழுவாதீங்க என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறி ஆறுதல்படுத்தினர் கிராமத்துப் பெண்கள்.