"வாழ்த்துக்கள் உதய்.. தொடர்ந்து உதை".. கரு பழனியப்பன் "ஹா ஹா"!

Su.tha Arivalagan
Sep 05, 2023,10:07 AM IST
சென்னை: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  தலையை சீவுவோருக்கு ரூ. 10 கோடி பரிசளிக்கப்படும் என்று கூறிய சாமியாருக்கு உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதிலுக்கு இயக்குநர் கரு. பழனியப்பன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சநாதனத்தை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும். அது டெங்கு, கொரோனாவைரஸ், மலேரியா போல.. அதை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசியிருந்தார். இது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில்தான் அதிக அளவில் கொந்தளிப்புகளும், குமுறல்களும் வெடித்துள்ளன.



பல்வேறு இந்து மத அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைவர்கள் சரமாரியாக கண்டித்துப் பேசி வருகிறார்கள். சாமியார்களும் கூட கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில்,  பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் , உதயநிதி ஸ்டாலின் தலையை சீவி கொண்டு வருவோருக்கு ரூ. 10 கோடி தரப்படும் என்று தலைக்கு விலை வைத்துள்ளார்.

இதற்கு உதயநிதிஸ்டாலின் பதில் கொடுத்துள்ளார். முன்பு கலைஞருக்கும் இப்படித்தான் விலை வைத்தார்கள். அதற்கு அவர் சரியான பதிலடி கொடுத்தார். அவரது பேரன் நான்.. எனக்கு விலை வைத்துள்ளார்கள் இப்போது. எனது தலையை சீவ எதுக்கு 10 கோடி.. ஒரு பத்து ரூபாய்க்கு சீப்பு வாங்கிக் கொடுத்தா நானே சீவிட்டு போறேன் என்று கூறியிருந்தார் உதயநிதி.

இதற்கு கரு பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், 

ஹா.. ஹா.. 
முன்னர், கலைஞரின் தலையை சீவுவேன் என்றவர்கள் இவர்கள்.! நான் சீவியே நாளாகிவிட்டதே என்று சிரித்தார்அவர்!   கொள்கை வாரிசு யார் என்று நாம்  தீர்மானிப்பதில்லை.
எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.! 
சின்னவரை முன்னவர் ஆக்கியிருக்கிறார்கள் எதிரிகள்!
வாழ்த்துக்கள் உதய்! தொடர்ந்து உதை! என்று கூறியுள்ளார் கரு. பழனியப்பன்.