கள்ளக்குறிச்சியில் நடந்தது சீரியஸான சம்பவம்.. நாங்க கண்டிச்சிருக்கோம்.. கார்த்தி சிதம்பரம்

Su.tha Arivalagan
Jun 24, 2024,12:08 PM IST

டெல்லி:   கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை காங்கிரஸ் கட்சி கண்டித்துள்ளது. அங்கு நடந்திருப்பது சீரியஸான சம்பவம். கள்ளச்சாரயத்தை ஒடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்  குடித்து 58 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தொடர்ந்து பலர் கைதாகி வருகின்றனர்.




இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாஜகவும் போராட்டம் நடத்தியது.  தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு சென்றுள்ளனர். அதேபோல முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோரும் அங்கு சென்றனர்.


இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்திடம் ஏன்ஐ செய்தியாளர் கேட்டபோது, நாங்கள் இந்த விவகாரத்தில் அமைதியாக இல்லை. ஏற்கனவே கண்டித்திருக்கிறோம். முழுமையாக இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளோம். கள்ளச்சாரயப் புழக்கத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். 


நாங்கள் பொறுப்பான கட்சி. கள்ளக்குறிச்சியில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியும். இது சீரியஸான விஷயம்.  எனவே நாங்கள் இதில் அமைதி காப்பதாக தேவையில்லாமல் கற்பனை செய்ய வேண்டாம் என்று கூறினார் கார்த்தி சிதம்பரம்.