"டிக்கெட்.. டிக்கெட்.. டிக்கெட்"... அரசு பேருந்தில் "ஒரு நாள் கண்டக்டர்" ஆன மாணவி!

Meenakshi
Feb 08, 2024,05:21 PM IST

காலபுரகி:  கர்நாடக மாநிலத்தில் அரசுப் பேருந்து நடத்துனராக வேண்டும் என்ற மாணவியின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளனர் போக்குவரத்து அதிகாரிகள்.


ஆசை என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வரும். சிலருக்கு பெரிய ஆசைகளும், ஒரு சிலருக்கு ஆசை என்பது சிறிய அளவில் இருக்கும். ஒரு சிலர் தனது ஆசையை யாரிடமும் கூறாமலும் இருப்பதும் உண்டு. இப்படித் தான் ஒரு மாணவிக்கு ஆசை ஏற்பட்டுள்ளது. என்னவாக வேண்டும் என்று தெரியுமா? பேருந்து நடத்துனர். அந்த ஆசையையும் அவர் மனதிற்குள் மட்டும் வைக்காமல் அதை யாரிடம் தெரிவித்தால் ஆசை நிறைவேறுமோ? அவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த மாணவியின் புத்திசாலித்தனத்தை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


கர்நாடக மாநிலம் காலபுரகியில்  படித்து வரும் வித்யா என்ற மாணவிதான் அவர். அப்சல்பூர் கட்டரகா கிரமத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவியான வித்யாவுக்கு அரசுப் பேருந்தில்  நடத்துனராக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் பேருந்து பணிமனை அதிகாரியை அணுகிய விதயா தனது ஆசையை தெரிவித்துள்ளார். அதிகாரிகளும் இவருடைய ஆசையை நிறைவேற்றி வைப்பதாக தெரிவித்துள்ளனர். 




அத்தோடு நில்லாமல், எப்படி டிக்கெட் வழங்க வேண்டும் என்று மாணவி வித்யாவிற்கு பயிற்சி அளித்துள்ளனர்.  அதன் பின்னர் மாணவி வித்யா அப்சல்பூரில் இருந்து கட்டரகா கிராமத்திற்கு சென்ற அரசு பேருந்தில் நடத்துனராக பணி புரிந்துள்ளார். அதிகாரிகள் உதவியுடன் நடத்துனராக பணி புரிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. 


சர்வ சாதாரணமாக அனைவருக்கும் டிக்கெட் கிழித்துக் கொடுத்தார் வித்யா. அதைப் பார்த்து அனைவரும்  ஆச்சரியப்பட்டனர். அத்துடன் அனைவருடைய பாராட்டையும் பெற்றார். மாணவி வித்யாவின் ஆசையை நிறைவேற்றி வைத்த பேருந்து பணிமனை அதிகராரிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


சூப்பர்ல!