சி அன்ட் டி பிரிவு வேலைகளில்.. 70% வேலை கன்னடர்களுக்கே.. கர்நாடக அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு!

Su.tha Arivalagan
Jul 17, 2024,09:14 PM IST

பெங்களூரு: கர்நாடகாவில், தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு வேலைகளில் 70 சதவீதம் கன்னடர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


தனியார் நிறுவனங்களில், நிர்வாகம் சாராத பணிகளில் 70 சதவீதம் வரை கன்னடர்கள்  மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் 50 சதவீதம் பேர் கன்னடர்களாக இருக்க வேண்டும் என்று கர்நாடக அரசு சட்ட மசோதா கொண்டு வந்துள்ளது. இது சலசலப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.




மணிப்பால் குளோபல் கல்வி சேவை குழுமத்தின் தலைவரான மோகன் பய் இதுகுறித்துக் கூறுகையில், இது அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது, பாசிச போக்குடையது என்று வர்ணித்துள்ளார். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மஜூம்தார் ஷா கூறுகையில், இந்த மசோதாவை நான் வரவேற்கிறேன். அதேசமயம், இந்தக் கொள்கையால், அதிக திறன் தேவைப்படும் பணிகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


முன்னதாக சி மற்றும் டி பிரிவுகளில் 100 சதவீத வேலைகள் கன்னடர்களுக்கே கொடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா டிவீட் போட்டிருந்தார். இது பெரும் அதிர்ச்சியையும், எதிர்ப்பையும் கொண்டு வந்தது. இதையடுத்து தனது டிவீட்டை டெலிட் செய்து விட்டார் முதல்வர் சித்தராமையா. அதன் பிறகு இந்த சட்ட மசோதா குறித்து மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லால் விளக்கம் அளித்தார்.


அமைச்சர் சந்தோஷ் லால் கூறுகையில், நிர்வாகம் அல்லாத பணிகளில் 70 சதவீத ஊழியர்கள் கன்னடர்களாக இருக்க வேண்டும். நிர்வாகப் பிரிவுகளில் 50 சதவீதம் பேர் கன்னடர்களாக இருப்பார்கள் என்று விளக்கினார். ஒரு வேளை குறிப்பிட்ட பிரிவுகளில் தேவையான கன்னடர்கள் கிடைக்காவிட்டால் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கலாம் என்றும் அவர் விக்கியுள்ளார்.


அமைச்சர் மேலும் கூறுகையில், கர்நாடகத்தில் போதுமான திறமையான பணியாளர்கள் உள்ளனர். நிறைய என்ஜீனியரிங் கல்லூரிகள் உள்ளன, மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, சர்வதேச பள்ளிகள் உள்ளன. இங்கு திறமைக்குப் பஞ்சமில்லை. மொத்தம் உள்ள ஊழியர்களில 70 சதவீதத்தை மட்டுமே கன்னடர்களுக்குத் தரக் கேட்கிறோம் என்றார்.


கர்நாடக அரசின் இந்த கொள்கை முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை கடுமையாக பாதிக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத்துறைதான் கர்நாடகத்திற்கு மிகப் பெரிய வருமானத்தைக் கொடுக்கிறது. அந்தத் துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மிக மிக கடினம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.