கர்நாடக தேர்தல் முடிவுகள்: "யாரும் தடுத்து நிறுத்த முடியாது".. காங்கிரஸ் அதிரடி டிவீட்

Su.tha Arivalagan
May 13, 2023,11:15 AM IST
டெல்லி: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் அதிரடி காட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு பரபரப்பான டிவீட் போட்டுள்ளது.

"என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது" என்று காங்கிரஸ் டிவீட் போட்டு பாஜகவுக்கு காலையிலேயே சூப்பர் மெசேஜ் கொடுத்துள்ளது.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை பலத்தைத் தாண்டி வெற்றியைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு காங்கிரஸ் தனது சொந்த பலத்தில் ஆட்சியமைக்கும் சூழல் எழுந்துள்ளது. இதை காங்கிரஸார் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.



கர்நாடகத்திலும் காங்கிரஸார் பெரும் வெற்றிக் கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி ஒரு டிவீட் போட்டுள்ளது. அதில், நான் கண்ணுக்குத் தெரியாதவன்.. நான் நம்பிக்கையானவன்..  என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்ன மேட்டர் என்றால் ராகுல் காந்தியின் பாரத் ஜோதோ யாத்திரை வீடியோவை அந்த டிவீட்டில் இணைத்துள்ளது காங்கிரஸ். இதன் மூலம் ராகுல் காந்தியை யாராலும் தடுக்க முடியாது, முடக்க முடியாது, பதவியைப் பறித்தாலும் அவரது எழுச்சியை அடக்க முடியாது என்ற மறைமுகமான மெசேஜை அது பாஜகவுக்கு கொடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

கர்நாடகத்திற்கும் காந்தி குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உள்ளது. கர்நாடகத்தின் பெல்லாரிதான் சோனியா காந்தியை முன்பு தேர்ந்தெடுத்தது. இப்போதைய தேர்தலிலும் சோனியா காந்தியே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்திருந்தார்.  ராகுல் காந்தி முகாமிட்டு பிரச்சாரம் செய்தார். பிரியங்கா காந்தியும் பிரச்சாரம் செய்தார். அதற்கு தகுந்த பதிலைக் கொடுத்து விட்டது கர்நாடகம்.