அண்ணாமலை பிரச்சாரத்துக்கு தடை விதிங்க.. கர்நாடக காங்கிரஸ் அதிரடி!

Aadmika
Apr 26, 2023,11:29 AM IST
பெங்களூரு : கர்நாடக சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கர்நாடக தேர்தல் கமிஷனிடம் அம்மாநில காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. அடுத்தடுத்த திருப்பங்கள், மோதல்கள் என கர்நாடக சட்டசபை தேர்தல் களம் களைகட்டி உள்ளது.  ஆளும் பாஜக ஆட்சிய தக்க வைக்க மும்முரமாக உள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸோ ஆட்சியைப் பிடிக்க வேகம் காட்டுகிறது. நடுவில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் டஃப் கொடுத்து வருகிறது.



கர்நாடக சட்டசபை தேர்தல் பாஜக இணை பொறுப்பாளராக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்ணாமலை, ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதால் கர்நாடகாவில் பல பகுதிகளை பற்றியும், அங்குள்ள மக்கள் குறித்தும் அவருக்கு நன்கு தெரியும். இந்த ஒரு காரணத்திற்காகவே கட்சியில் சீனியர்கள் பலர் இருந்தும் அண்ணாமலையை கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளராக கட்சி தலைமை நியமித்தது. இதற்கு ஹெச்.ராஜா கூட வரவேற்பும், வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையும் தற்போது புயல் வேகத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக, காங்கிரஸ் கட்சிகளை அலற விட்டு வருகிறார். இந்நிலையில்  கர்நாடக காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் நாகராஜ் கவுடா, கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஏற்கனவே கர்நாடகாவில் போலீசாக பணியாற்றி உள்ளார். அவருக்கு கீழ் பணியாற்றி அதிகாரிகள் பலர் தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தனது செல்வாக்கை பயன்படுத்தி, பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணாமலை, அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார். முன்னாள் போலீஸ் அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்வது கிடையாது. அவரின் செயல்பாடுகள் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை பாதிக்கும் வகையில் உள்ளது. இதனால் கர்நாடக தேர்தல் களத்தில் அண்ணாமலை பிரச்சாரம் செய்யவோ, கர்நாடகாவில் தங்கவோ தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலையால் அங்கு பாஜக தலைவர்களே கூட எரிச்சலடைந்துள்ளதாக ஒரு பேச்சு உள்ளது. சமீபத்தில் பாஜகவை விட்டு விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், மூத்த தலைவர்கள் அண்ணாமலையால் அப்செட் ஆகியுள்ளதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அவருக்கு தடை கோரியுள்ளது காங்கிரஸ் கட்சி.