"தாமரை"யை அள்ள வரும் "கை".. கர்நாடக காங்கிரஸின் பலே திட்டம்!

Su.tha Arivalagan
Aug 21, 2023,12:23 PM IST
பெங்களூரு: கர்நாடகத்தில்  எப்படி ஆபரேஷன் லோட்டஸை அமல்படுத்தி ஆட்சியை பாஜக பிடித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து பல எம்.எல்ஏக்கள், தலைவர்களை இழுத்ததோ அதே பாணியில் காங்கிரஸும் ஆபரேஷன் ஹஸ்தா என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளது.

கர்நாடகத்தில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. தேர்தலுக்கு முன்பாகவே பல்வேறு முக்கிய பாஜக தலைவர்கள் காங்கிரஸ் பக்கம் தாவினர். இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அதை மேலும் தீவிரப்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.



ஆபரேஷன் ஹஸ்தா (ஹஸ்தா என்றால் கை என்று பொருள்) என்ற பெயரில் இந்த வேலையை காங்கிரஸ் தீவிரப்படுத்தவுள்ளது. அதன்படி முக்கிய பாஜக தலைவர்களை காங்கிரஸ் பக்கம் இழுக்கவுள்ளனராம். முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான டி.சோமசேகர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்துப் பேசியுள்ளது இதை வலுப்படுத்துவதாக உள்ளது.  சோமசேகர் ஏற்கனவே காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவியவர் ஆவார்.

பெங்களூரு யஷ்வந்த்பூர் எம்எல்ஏவாக இருப்பவர். தனது தொகுதி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாகவே முதல்வரை சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால் அவரை காங்கிரஸுக்குத் திரும்புமாறு முதல்வர் சித்தராமையை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. சோமசேகர் சமீபத்தில்தான் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை, தனது அரசியல் குரு என்று பாராட்டிப் பேசியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். 

இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஆயனூர் மஞ்சுநாத், துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்துப் பேசினார். இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், என்னைப் பலரும் சந்திக்கிறார்கள். அதேபோல மஞ்சுநாத்தும் சந்தித்தார். அவ்வளவுதான்.. இதில் விசேஷம் ஏதும் இல்லை என்றார்.

ஆனால்  பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து பல முக்கியஸ்தர்களை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவே அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் 17 காங்கிரஸ்  மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்களை இழுத்துத்தான் பாஜக ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம். அதற்குப் பதிலடி கொடுக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.