பெண் அதிகாரியை அருகே அழைத்து.. நெற்றியில் குங்குமம்.. காங்கிரஸ் எம்பி செயலால் பெரும் சர்ச்சை!

Manjula Devi
Jul 29, 2024,06:49 PM IST

பெங்களூர்:  கல்யாணம் ஆகவில்லை என்று லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கலின்போது கூறி விட்டு, தற்போது மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் வைத்து அரசு பெண் அதிகாரிக்கு நெற்றியில், மனைவிக்கு வைப்பது போல குங்குமம் வைத்த காங்கிரஸ் எம்.பியால் சலசலப்பு ஏற்பட்டது.


அவரது தேர்தலை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜகவினர் முடிவு செய்துள்ளனர்.


சாம்ராஜ் நகர் தொகுதியிலிருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் சுனில் போஸ். முக்கிய போட்டியாளரான பாஜக  வேட்பாளர் எஸ்.பாலராஜை எதிர்த்து 84,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தேர்தல் சமயத்திலேயே அவர் தனது திருமணத்தை மறைத்துள்ளார் என்று பாஜக தரப்பில் பிரச்சினை கிளப்பப்பட்டது. ஆனால் தனக்குத் திருமணமாகவில்லை எனது தனது வேட்பு மனு ஆவணத்தில் தெரிவித்திருந்தார் சுனில் போஸ்.




இந்த நிலையில், நேற்று மைசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் சுனில் போஸ்.  அவருடன் சுற்றுலா துறை இணை இயக்குனர் சவிதா மற்றும் பல அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். இவர்களுக்காக சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டது. அப்போது கிட்டத்தட்ட கணவன் மனைவி போலவே சுனில் போஸும், சவீதாவும் நடந்து கொண்டனர்.  அதில் உச்சபட்சமாக, சுனில் போஸ் அதிகாரி சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தார்.  அதுவும் தலைக்குப் பின்னால் கையைக் கொண்டு போய் நெற்றியில் குங்குமம் வைத்தார். வழக்கமாக திருமணத்தின் போதுதான் இப்படி குங்குமம் வைப்பார்கள். 


அவர் குங்குமம் வைத்த விதமும் சாதாரணமாக தோன்றவில்லை. மாறாக அவர் குங்குமம் வைத்த விதம் ஒரு பெண்ணிடம் கணவருக்கு மட்டுமே இருக்கின்ற உரிமை போலவே தெரிந்தது. சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வைத்து அதிகாரி சவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்தது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.  இது அங்கு விவாதங்களையும், சலசலப்பையும் கிளப்பியுள்ளது.