cauvery Issue: கர்நாடகாவில் மீண்டும் பந்த்.. மக்களுக்குப் பாதிப்பு!

Su.tha Arivalagan
Sep 29, 2023,10:01 AM IST
பெங்களூரு: காவிரிப் பிரச்சினையை வைத்து அடுத்தடுத்து கர்நாடகாவில் பந்த் போராட்டம் நடத்தப்படுவதால் அப்பாவி மக்களின் இயல்பு வாழ்க்கையும், பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாத இந்த பந்த் போராட்டங்களால் அரசுக்கும், அப்பாவி மக்களுக்கும் நஷ்டம்தான் ஏற்படுகிறதே தவிர வேறு எந்த பயனும் இது கொடுக்காது என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

2 நாட்களுக்கு முன்புதான் பெங்களூரு பந்த் நடத்தப்பட்டது. அதை சில கன்னட அமைப்புகள் இணைந்து நடத்தின. இன்று கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது. இந்தப் போராட்டத்தையும் சில கன்னட அமைப்புகள் நடத்தியுள்ளன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டங்களை ஆதரிப்பதுதான் "விசேஷமானது"!



அரசு இந்தப் போராட்டங்களைத் தடுக்கவில்லை. தடை செய்யவும் இல்லை. மாறாக போலீஸ் பாதுகாப்பு மட்டும் கொடுத்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது. பந்த் நடக்கும்போதெல்லாம் அங்கு வசிக்கும் தமிழ் மக்கள்தான் பீதி அடையும் நிலை ஏற்படுகிறது. காரணம், கடந்த காலங்களில் நடந்த மிகக் குரூரமான வன்முறைகள்தான்.

காவிரிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம், அரசுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும்போதெல்லாம் இந்த பந்த் போராட்டங்கள் கையில் எடுக்கப்படுகின்றன. பந்த் போராட்டங்களுக்குப் பலன் கிடைக்காத சமயங்களில் வன்முறையை அரங்கேற்றுகிறார்கள். இதுதான் பல காலமாக தொடர்ந்து வருகிறது.

இன்று நடைபெறும் கர்நாடக பந்த் காரணமாக தமிழ்நாட்டிலிருந்து எந்த வாகனமும் கர்நாடகாவுக்குள் செல்லவில்லை. அனைத்து வாகனங்களும் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பந்த் முடிந்தவுடன்தான் அவை கர்நாடகாவுக்குள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கர்நாடகாவில் எந்த பாதிப்பும் பந்த் போராட்டத்தால் ஏற்படவில்லை. தெற்கு கர்நாடகாவில் மைசூர், மாண்டியா உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இயல்பு வாழ்க்கை ஓரளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில், பஸ்கள், மெட்ரோ ரயில்கள் ஓடுகின்றன. ஆனால் கூட்டம் அதிகம் இல்லை. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நடந்து வரும் பந்த் போராட்டங்களால் சில ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஐடி நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.