பண பலத்துக்கும், அதிகாரத்திற்கும் கர்நாடகா கொடுத்த சாட்டையடி.. தலைவர்கள் கருத்து

Su.tha Arivalagan
May 13, 2023,12:29 PM IST
சென்னை: கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி மகத்தானது. பண பலத்துக்கும், அதிகாரத்திற்கும் மக்கள் சாட்டையடி கொடுத்துள்ளனர் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர்  ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரியவெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை 137 தொகுதிகளில் அது முன்னிலையில் உள்ளது. பாஜக 63 தொகுதிகளுடன் சுருண்டு போய் விட்டது. மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 20 சீட்டுகள்தான் கிடைக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் இதுதொடர்பாக போட்டுள்ள டிவீட்டில், கர்நாடக மக்கள் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளனர். இது காங்கிரஸின் வெற்றி அல்ல, அவர்களின் வெற்றி. மிகவும் ஆணித்தரமான தீர்ப்பு இது. பண பலம், அதிகார பலத்திற்கு எதிராக கர்நாடக மக்கள் திரண்டு எழுந்துள்ளனர்.  டபுள் என்ஜின் என்று கூறி வந்த பாஜகவுக்கு வலுவான தீர்ப்பைக் கொடுத்துள்ளனர் மக்கள்.

இது மாநில சட்டசபைக்கான தேர்தல் என்பதை விடு நாட்டு மக்களின் மாபெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய தேர்தலாக மாறியிருந்தது. இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை நெறிகள் காப்பற்றப்படுமா, அநீதி துடைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர். இன்று கர்நாடக மக்கள் அதைக் காத்துள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார் ப.சிதம்பரம்

சித்தராமையா

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில்,  கர்நாடக மக்கள் பாஜக அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். விரக்தி நிலைக்குப் போயிருந்தனர். இது எங்களுக்கு மிகப் பெரிய வெற்றி. இதை வரவேற்கிறோம். மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம் என்றார் சித்தராமையா.

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், கர்நாடகத்திற்கு நான் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளேன். அதை நிறைவேற்றுவேன். இதை நான் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருக்கும் தெரிவித்துள்ளேன் என்றார் சிவக்குமார். அவர் பேசும்போது கண்களில் நீர் ததும்பியது.

தோல்வியை ஒப்புக் கொள்கிறோம் - முதல்வர் பி.எஸ். பொம்மை

கர்நாடக பாஜக முதல்வர் பி.எஸ். பொம்மை கூறுகையில், தேர்தல் தோல்வியை நாங்கள் ஏற்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சிகளுக்குப் பின்னரும் எங்களால் வெற்றி பெற முடியாதது வருத்தம் அளிக்கிறது. ஒரு தேசியக் கட்சியாக நாங்கள் இந்தத் தோல்வி குறித்து ஆய்வு செய்வோம்.  தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பின்னர் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். என்ன தவறு நடந்தது என்பது குறித்து ஆராய்வோம். கட்சியை சீரமைப்போம். லோக்சபா தேர்தலுக்கு முன்பு கட்சியை பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்போம் என்றார் பொம்மை.