காங்கிரஸுக்கு நேரம் சரியில்லை..  கர்நாடக தேர்தலில் கால் வைக்கும் சரத் பவார் கட்சி!

Su.tha Arivalagan
Apr 15, 2023,11:22 AM IST
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளதால் காங்கிரஸ் கட்சி  எரிச்சலடைந்துள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. மக்கள் மத்தியிலும் பாஜக ஆட்சி மீது பெரும் அதிருப்தி அலை வீசி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நம்பித்தான் கர்நாடக பாஜக தலைவர்கள் உள்ளனர். உள்ளூர்த் தலைவர்கள் மீது மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு அதிருப்தி உள்ளது.

இதனால் காங்கிரஸ் கட்சிக்கு நிலவி வரும் ஆதரவு பலத்தை உடைக்க பாஜக கடுமையாக முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் பலத்தை உடைத்து பலவீனமாக்கி விட்டால் வாக்குகள் சிதறும், அதில் புகுந்து நாம் பலனடைந்து விடலாம் என்பது பாஜகவின் கணக்கு.
 


இந்த அடிப்படையில்தான்  அகில இந்திய மஜ்லிஸ் கட்சி  இத்தேர்தலில் போட்டியிடுவதை அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள். முஸ்லீம் வாக்குகளை காங்கிரஸிடமிருந்து பிரிக்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது. அப்படிச் செய்தால் பாஜகவுக்குத்தான் அது சாதகமாக முடியும். இந்த நிலையில் காங்கிரஸ் வாக்கு வங்கிக்கு இன்னொரு ஆபத்து வந்துள்ளது. அது தேசியவாத காங்கிரஸ் கட்சி. இக்கட்சி வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 45 தொகுதிகள் வரை போட்டியிடப் போவதாக கூறியுள்ளது.

தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சி தேசியவாத காங்கிரஸ். ஆனால் கர்நாடக தேர்தலில் காங்கிரஸுக்கு சாதகமான சூழல் நிலவும் நிலையில் அதை உடைக்கும் முகமாக தேசியவாத காங்கிரஸ் போட்டியிடப் போவதாக கூறியுள்ளது காங்கிரஸை அப்செட் செய்துள்ளது.  இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து பறி போயுள்ளது. அதை மீண்டும் பெற வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம். எனவேதான் நாங்கள் கர்நாடக தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றார்.

தனது கடிகாரம் சின்னத்தில்  கர்நாடக சட்டசபைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் போட்டியிடவுள்ளது.  மகாராஷ்டிர எகிகிரண் சமிதி கட்சியுடன் கூட்டணி வைத்து தேசியவாத காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.  மகாராஷ்டிர - கர்நாடக எல்லைப் பகுதியில் இக்கட்சிக்கு சற்று ஆதரவு உள்ளது. இப்பகுதியில் மராத்தி மொழி பேசும் மக்கள் பெரும்பாலானவர்கள் உள்ளனர் என்பது முக்கியமானது. இந்த வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்குப் போகவிடாமல் தடுக்க  தேசியவாத காங்கிரஸ் களம் இறக்கப்படுவதாக பேச்சு அடிபடுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடந்த வாரம்தான் தேசியக் கட்சி அந்தஸ்து பறி போனது. கூடவே, கோவா, மணிப்பூர், மேகாலயாவில் மாநிலக் கட்சி அந்தஸ்தும் சேர்ந்து பறிக்கப்பட்டு விட்டது நினைவிருக்கலாம். உண்மையிலேயே தேசியக் கட்சி அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற்காகத்தான் அக்கட்சி போட்டியிடுகிறதா அல்லது காங்கிரஸுக்கு நெருக்கடி தரும் திட்டமா என்பது தெரியவில்லை.