இப்பத்தான் ராஜஸ்தானை கைப்பற்றியது பாஜக.. அதுக்குள்ள கரன்பூரில் கவுத்திட்டாங்களே மக்கள்!

Su.tha Arivalagan
Jan 08, 2024,04:06 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் அபார வெற்றி பெற்று காங்கிரஸிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவுக்கு, கரன்பூர் இடைத் தேர்தலில் மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.


ராஜஸ்தான் சட்டசபைக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பொதுத் தேர்தல் நடந்தது. அதில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் காலி செய்து விட்டு  பாஜக அபார வெற்றி பெற்றது.  199 இடங்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில் 115 இடங்களை பாஜக வென்றிருந்தது. அந்தத் தேர்தலில் கரன்பூர் தொகுதியில் குர்மீத் சிங் கூனார் என்பவர் போட்டியிட்டு வென்றிருந்தார். இந்த நிலையில் திடீரென கூனார் மரணமடைந்தார்.  இதையடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.


இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ரூபிந்தர் சிங் கூனார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  அவருக்குப் போட்டியாக சுரேந்திர பால் சிங் என்பவர் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் அமைச்சராக இருக்கிறார். எம்எல்ஏவாக இல்லாத நிலையில் சுரேந்தரி பால் சிங்கை இந்த இடைத் தேர்தலில் பாஜக நிறுத்தியது. எப்படியாவது அவர் ஜெயித்து விடுவார் என்று பாஜக நம்பிக்கையுடன் இருந்தது.




ஆனால் மக்கள் கூனார் மீது வைத்துள்ள விசுவாசத்தை காட்டி விட்டனர். ரூபிந்தர் சிங் கூனார் இடைத் தேர்தலில் 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் சுரேந்திர பால் சிங்கைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடி விட்டார்.  கூனாருக்கு 94,950 வாக்குகளும், அமைச்சர் சுரேந்தர் பால் சிங்குக்கு 83,667 வாக்குகளும் கிடைத்தன.


இந்த வெற்றி காங்கிரஸ் கட்சியை உற்சாகத்தில் மூழ்கடித்துள்ளது. கூனார் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் கூறுகையில், கரன்பூர் மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அமைச்சர்கள் வந்து எனக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். ஆனால் அவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர். ஜனநாயகம் வென்றது என்று கூறியுள்ளார்.