ருசியான கார அல்வா .. இனிப்புகள் கொட்டிக்கிடக்கும் மிட்டாய் தெரு .. கேரளா டூர் நாள்- 3!

Su.tha Arivalagan
Oct 08, 2024,10:29 AM IST

சென்னை:  தென்தமிழ் இணைய வாசகர் காரைக்குடி லெட்சுமணனின் கேரளா சுற்றுலா டைரியிலிருந்து மேலும் ஒரு சுவாரஸ்ய பக்கம்.. உங்களுக்காக.


கேரளா டூரின் இரண்டாம் நாள் தொடர்ச்சியாக பாலக்காட்டில் இருந்து கோழிக்கோடு நோக்கி நாங்கள் பயணிக்கும் பொழுது தூரம்  குறைவுதான். ஆனால் பயண நேரம் மிகவும் அதிகம். ஏனென்றால் செல்லும் வழியில் உள்ள  மன்னார்காடு, கொண்டாட்டி  என்று பல்வேறு ஊர்களில் ட்ராபிக் மிக அதிகம்.  இவை அனைத்துமே,ஒவ்வொரு ஊரும்  20 கிலோமீட்டர் 25 கிலோ மீட்டர் சாலைகளிலேயே பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாலும் , குறுக்குச் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வருவதாலும் , நெருக்கடியான சூழ்நிலைகளை ஏற்படுத்தி வருகின்றது.


காவலர்கள் ஒருவர், இருவர் மட்டுமே இருந்து டிராபிக்கை சரி செய்கின்றனர்.  எங்கேயுமே சிக்னல் பார்க்க இயலவில்லை. சிக்னல்களே  இல்லை என்று கூறலாம். ஆனால் வாகனங்கள் திடீர் திடீரென்று குறுக்கு சாலைகளின் வழியாக வந்து சேர்வதால் டிராஃபிக் மிக அதிக அளவில் இருக்கின்றது. சுமார் ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரத்தில் கடக்க வேண்டிய பயண தூரம் 5 மணி நேரம் ஆகிவிடுகிறது. பைபாஸ் சாலைகளையும் எங்கேயும் பார்க்க முடியவில்லை. அப்படியே பைபாஸ் சாலையில் இருப்பதாக இருந்தாலும் அங்கும் ஏராளமான கடைகள் இருப்பதால் அந்த பகுதிகளும் நம்மால் வேகமாக செல்ல செல்ல இயலவில்லை. இது ஒன்றுதான் பாலக்காடு டூ  கோழிக்கோடு செல்லும் வழியில் உள்ள மிகப்பெரிய சிரமமான விஷயம் ஆகும்.


கண்கவர் கோழிகோடு பீச்




மதியம் 3 மணி அளவில் பாலக்காட்டில் கிளம்பிய  நாங்கள் இந்த டிராபிக்  கடலில் நீந்தி ஒரு வழியாக இரவு 8 மணி அளவில் கோழிகோடு வந்து அடைந்தோம். கோழிக்கோட்டில் நாங்கள் தங்கி இருந்த ஹோட்டலின் பெயர் மெட்ரோ டவர். மெட்ரோ டவர்  இடத்தை கோழிக்கோட்டில் எங்களுக்கு திசைகள் அமைப்பிலுள்ள பவித்ரா அவர்களின் மாமா நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். திசைகள் அமைப்பில் உள்ள பவித்ரா அவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்களது இல்லத்திற்கு எங்களால் பால காட்டில்  செல்ல இயலவில்லை. நவநீதன் அவர்களிடம்  கேட்டு மெட்ரோ டவரில் அறையை பிடித்தோம்.


அங்கு அனைத்து வசதிகளையும் நல்ல முறையில் செய்து கொடுத்திருந்தனர். அங்கிருந்து நாங்கள் இரவே கோழிக்கோடு  வந்து சேர்ந்தோம். கோழிக்கோடு பீச்சில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்தோம். இரவு நேரத்திலும் கோழிக்கோடு பீச்சில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் வந்து செல்கிறது. கோழிக்கோடு பீச்சில்  சுதந்திரம் தொடர்பான ஒரு கல் சிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் நடுவே மிக அருமையான லைட் வசதி செய்து கொடுத்துள்ளனர். மக்கள் அதைச் சுற்றி, சுற்றி போட்டோ எடுத்துக்கொண்டனர். அவற்றையெல்லாம் பார்வையிட்டு, நாங்களும் போட்டோ எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிக கோழிக்கோடு பிரபலமான  மிட்டாய் தெருவிற்கு சென்றோம்.


கலகலப்பான மிட்டாய் தெரு




மிட்டாய் தெரு  எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. மிட்டாய் தெருவில் எங்கு நோக்கிலும் வண்ண விளக்குகளால் நிரம்பி வழிகிறது. அல்வாவுக்கு பெயர்போன இடம் மிட்டாய் தெரு என்று சொன்னார்கள். பல்வேறு விதமான இனிப்புகள் வண்ண விளக்குகள் வெளிச்சத்தில் ஜொலிக்கிறது.பார்ப்பதற்கே மிக அருமையாக இருக்கிறது. சிப்ஸ் வகைகளும் சூப்பர். கோழிக்கோடு  மிட்டாய் தெருவில் பல நூறு  கடைகள் இருக்கின்றன. அனைத்திலுமே அல்வாக்கள் மிக பிரபலமாக விற்கப்படுகிறது. அல்வாக்கள் சர்க்கரை, இனிப்புகள் என அனைத்துமே மிக அருமையாக செய்து விற்று  வருகின்றனர்.


கோழிக்கோடு நேந்திரம் சிப்ஸ் மிகவும் பிரபலமானது என்று தெரிவித்தார்கள்.நைஸ் சிப்ஸ் என்று கூறினார்கள்.சுவையும் நன்றாக இருந்தது. நாங்கள் கோழிக்கோடு சிப்ஸ் வாங்கிக் கொண்டோம். பச்சை மிளகாயும், மிளகும் இணைந்த கார அல்வாக்களும்  இருக்கின்றன.இனிப்பு அல்வா சாப்பிட்டு இருப்போம்.அனால் காரா அல்வா என்பது புதியது.சுவையும் நன்றாக இருந்தது. சர்க்கரை மற்றும் பாகில்  செய்த சாக்லெட்டுகளை வாழை இலையில் மடித்து கொடுக்கின்றனர். அதுவும்  அருமையாக இருந்தது. அல்வாக்களில் இன்னும் பலவேறு வகைகள் இருந்தது.அவற்றையும் பார்த்து ரசித்து விட்டு அங்கிருந்து இரவு அறைக்கு சென்றோம்.


வாஸ்கோடா காமா வந்த பகுதி




கோழிக்கோடு செல்லும்  திட்டம்  எங்களுடைய பயணத் திட்டத்தில் இல்லை. தோழர்  மோகன் அவர்கள் தான் இந்த பயணத்திட்டத்தை நடுவில் எங்களுக்கு புகுத்தி கொடுத்தார். கோழிக்கோட்டில் பீச் மற்றும் மிட்டாய் தெரு   ஆகியவற்றை பார்த்துவிட்டு மனமகிழ்ச்சியுடன் மீண்டும் இரவு ருசி பவன்  என்கிற ப்யூர் வெஜ் ஹோட்டலில் சென்று நல்ல முறையில் உணவு அருந்தினோம். ருசி பவன் ஹோட்டல்,  தங்கும் இடத்தையும் எங்களுக்கு பவித்ரா அவர்களின் மாமா நவநீதன் அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அது எங்களுக்கு நல்ல முறையில் அமைந்திருந்தது. மகிழ்ச்சியாக இருந்தது.


அங்கிருந்து நாங்கள் காலையில் கிளம்பி மீண்டும் கோழிக்கோடு சென்று நல்ல முறையில் பீச் வாக்  செய்தோம். பீச்சில் மணலில் வெறும் கால்களில் நடப்பதே தனி சுகம் தான்.காலையில் பெரும்பாலான சுற்றுலா வாசிகள் கடல் அலைகளை வந்து ரசித்து செல்கின்றனர். காலையில் பீச்  முடித்துக்கொண்டு மெட்ரோ டவர் ரூமில் காலையில் கொடுத்த  உணவருந்திவிட்டு கோழிக்கோட்டில் அடுத்த இடத்தை பார்க்க கிளம்பினோம். கோழிக்கோடு அறையை காலி செய்து விட்டு , 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெய்பூர் என்ற  இடத்தில் உள்ள ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஷிப்பிங்  கட்டும் இடத்தை பார்ப்பதற்காக நாங்கள் சென்றோம். அதற்கு முன்பாக காக்காடா என்கிற பகுதியில் சிப்பிங்  கட்டும் இடத்தையும் நாங்கள் பார்த்தோம்.


அடுத்து இலக்கு வயநாடு




மிக அருமையான வேலைப்பாடுகள் அமைந்த இருந்தது. கோழிக்கோட்டிலியே தளி  என்கிற ஒரு ஸ்தலமும், முஸ்லிம்களுக்கான மிகப்பெரிய மசூதியும் இருப்பதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார். கோழிக்கோட்டில் மிகப்பெரிய பிளானிட்டோரியம்  இருப்பதாகவும் இன்னும் சில பார்க்குகள் இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இரண்டு நாட்கள் அங்கேயே இயல்பாக சுற்றுலா செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்கள். கோழிக்கோட்டில் இருந்து 20 கிலோமீட்டர் துலைவில் உள்ள காப்படா  பீச்சிறகு  அனைவரும் எங்களை செல்ல கூறினார்கள். நாங்கள் காப்பட பீச்சுக்கு  செல்ல இயலவில்லை. 




வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த பகுதிக்கு எங்களால் செல்ல இயலாமல் போய்விட்டது. காப்படா பீச்தான்  வாஸ்கோடகாமா  முதன்முதலாக இந்தியாவுக்கு வந்து இறங்கிய இடம் என்று நண்பர்கள் தெரிவித்தார்கள். அடுத்த முறை செல்லும்போது அவசியம் செல்லலாம் என்று எண்ணிக் கொண்டு வந்துவிட்டோம்.  நாங்கள் கோழிக்கோடு முடித்துக்கொண்டு வயநாடு செல்ல தயாரானோம்.


(பயணம் தொடரும்)


கட்டுரை- புகைப்படங்கள்:

லெட்சுமணன், காரைக்குடி



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்