கட்அவுட் வைத்தபோது.. மின்சாரம் தாக்கி பலியான.. 3 ரசிகர்கள்.. யாஷ் கண்ணீர் அஞ்சலி!

Manjula Devi
Jan 09, 2024,05:42 PM IST

பெங்களூரு:  கன்னட நடிகரான நடிகர் யாஷ் பிறந்த நாளுக்காக கட் அவுட் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி மூன்று ரசிகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ரசிகர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் யாஷ்.


சிறந்த கன்னட நடிகரான யாஷிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. கன்னடம் மட்டுமல்லாமல் தமிழில் கேஜிஎஃப் படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யாஷ். இப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை வாரிக் குவித்தது. இப்படத்தில் இவரின் மாசான நடிப்பின் மூலம் தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். 




இந்நிலையில் கர்நாடக மாநிலம் சூரனகி கிராமத்தில் யாஷ் பிறந்த நாளுக்காக நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்காக ரசிகர்கள் முடிவு செய்து, அங்குள்ள மின் கம்பத்தில் ஏறி உள்ளனர். பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. அப்போது கீழே விழுந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற வந்த மற்ற சிலர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களின் பெயர்கள் -  நவீன் (20), முரளி (20), ஹனுமந்த் (24) ஆகும்.


இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இறந்த ரசிகர்களின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், கட்அவுட்டில் இருந்த கம்பி மின் கம்பிகளில் உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் ,சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதனை அறிந்த நடிகர் யாஷ் இறந்த ரசிகர்களின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்தவர்களையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.