நெப்போலியனின் ஜப்பான் வீட்டுக்குச் சென்ற கனிமொழி.. தனுஷ், அக்ஷயாவுக்கு நேரில் வாழ்த்து!
சென்னை: நடிகர் நெப்போலியன் தற்போது தங்கியிருக்கும் ஜப்பான் வீட்டுக்கு திமுக எம்.பி கனிமொழி சென்று அவரது மகன் தனுஷ் மற்றும் தனுஷின் மனைவி அக்ஷ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கி மகிழ்ந்தார்.
நெப்போலியன் - சுதா தம்பதியினரின் மூத்த மகன் தனுஷ். அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட நெப்போலியன் குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்புதான் தங்களது குடும்பத்தின் மறக்க முடியாத திருமண விழாவை ஜப்பானில் நடத்தினர். தனுஷுக்கும், அக்ஷ்யாவுக்கும் அங்கு நடந்த கோலாகலமான திருமணம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
மகனுக்காகவே ஜப்பானுக்கு வந்து அங்கு திருமணத்தை நடத்தினார் நெப்போலின். பல்துறைப் பிரமுகர்கள் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டு தனுஷ் தம்பதியை வாழ்த்தினர்.
இந்த நிலையில் ஜப்பானில் நடந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்த திமுக எம்.பி. கனிமொழி நெப்போலினின் ஜப்பான் வீட்டுக்குச் சென்று அவர்களைச் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக நெப்போலியன் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், நான் பெரிதும் மதிக்கக்கூடிய எனது அரசியல் குரு, தலைவர் கலைஞர் அவர்களின் மகள் திருமதி கனிமொழி அவர்கள், ஒரு வாரகாலம் ஜப்பானுக்கு வருகைதந்துள்ளார்.
நான்கு நாட்களுக்கு முன்பாக ஜப்பானின் இந்திய தூதுவர் திரு சிபி ஜார்ஜ் அவர்கள் கொடுத்த விருந்தில் , தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் திரு ரேவந்த் ரெட்டி அவர்களும், கனிமொழி அவர்களும் நானும், கலந்து கொண்டோம். இன்று ஏப்ரல் 21 திங்கள் கிழமை, திருமதி கனிமொழி அவர்கள், ஜப்பானில் நாங்கள் வசிக்கும் எங்கள் இல்லத்திற்கு வருகைதந்து தனுஷையும் அக்ஷயாவையும் வாழ்த்தினார்கள்.
சில மணிநேரம் தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி பழைய நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டோம். மகிழ்வோடும், மனநிறைவோடும் அவர்களை வழி அனுப்பி வைத்தோம். இன்று இரவு இந்தியா திரும்புகிறார்கள் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.