தேஜஸ்வி யாதவா.. இல்லை தேஜஸ்வி சூர்யாவா?.. பாவம் கங்கனாவே கன்பியூஸ் ஆயிட்டாரு!

Su.tha Arivalagan
May 06, 2024,08:50 AM IST

சிம்லா: இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத், தனது சொந்தக் கட்சி எம்பியை ரவுடித்தனம் செய்பவர், மீன் சாப்பிடுபவர் என்று கூறி கடுமையாக விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வாய் தவறித்தான் இப்படி விமர்சித்து விட்டார் கங்கனா. காரணம், பெயர்க் குழப்பம்தான்!


நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ளார் கங்கனா. இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் அவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அங்கு அனல் பறக்கப் பிரச்சாரம் செய்து வரும் கங்கனா நேற்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.




கங்கனா பேசும்போது, பாழாய்ப் போன இளவசர்களைக் கொண்ட கட்சி உள்ளது. நிலவில் உருளைக்கிழங்கை பயிரிட விரும்பும் ராகுல் காந்தி ஒரு பக்கம், ரவுடித்தனம் செய்து கொண்டு, மீன் மாமிசம் சாப்பிடும் தேஜஸ்வி சூர்யா இன்னொரு பக்கம் என்று அவர் பேச கூட்டத்தினர் குழப்பமடைந்தனர்.


தேஜஸ்வி சூர்யா நம்ம கட்சிக்காரராச்சே, பெங்களூர் தெற்குத் தொகுதி எம்.பி ஆச்சே.. நம்ம கட்சியின் இளம் தலைவராச்சே என்று கூட்டத்தினர் குழம்பினர். பிறகுதான் தெரிந்தது.. கங்கனா சொல்ல வந்தது தேஜஸ்வி யாதவை. அதாவது பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும், ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவைத்தான், தேஜஸ்வி சூர்யா என்று வாய் தவறிக் கூறியுள்ளார் கங்கனா.


கங்கனா இப்படி வாய் உளறி பேசியதை தற்போது இந்தியா கூட்டணிக் கட்சியினர் வைரலாக்கி வருகின்றனர். அதை விட முக்கியமாக இந்த வீடியோவை தேஜஸ்வி யாதவே ரீபோஸ்ட் செய்து, யார் இந்தப் பெண் என்று கிண்டலாக கேட்டுள்ளார்.


கங்கனா போட்டியிடும் மண்டி தொகுதியில் ஜூன் 1ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 7வது கட்ட வாக்குப் பதிவின்போது இந்தத் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.