கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

Aadmika
Oct 23, 2024,04:35 PM IST

திருச்செந்தூர் : முருக பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மஹா கந்தசஷ்டி விழா நவம்பர் 02ம் தேதி துவங்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா நடைபெற்றாலும், கந்தசஷ்டி, சூரசம்ஹாரம் என்றதுமே அனைவருக்கும் நினைவில் தரும் தலம் திருச்செந்தூர் தான். 


முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படைவீடாக இருக்கக் கூடிய திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவம்பர் 02ம் தேதி துவங்கி, நவம்பர் 08ம் தேதி வரை மகா கந்தசஷ்டி விழா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 07ம் தேதியும், முருகன் திருக்கல்யாண வைபவம் நவம்பர் 08ம் தேதியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருச்செந்தூரில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 




திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு அருகில் பக்தர்கள் தங்கும் விடுதிகள் புதிதாக கட்டப்பட்டு வந்தது. சுமார் 500 பக்தர்கள் வரை தங்கும் வசதி கொண்ட இந்த விடுதி ரூ.68 கோடி செலவில் கட்டப்பட்டு, சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த தங்கும் விடுதி தற்போது பக்தர்கள் பயன்பாட்டிற்காக தயாராக உள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த விடுதியில் ஏசி, ஏசி வசதி இல்லாதது, இரண்டு நபர்கள் தங்குவது, 7 நபர்கள் தங்குவது, 10 நபர்கள் தங்குவது என பல வகைகளில் அறைகள் உள்ளன. இது தவிர டிரைவர்கள் தங்குவதற்கான அறை, பார்க்கிங் வசதி என பல விதமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


இந்த அறைகளுக்கு ரூ.500, ரூ.750 என பல விதங்களில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவின் போது தங்குவதற்கு இந்த விடுதியில் ரூம் புக் செய்ய விரும்புபவர்கள், விடுதியில் உள்ள கோவில் அலுவலகத்திற்கு நேரில் சென்று தான் புக் செய்ய வேண்டும். புதிய கட்டிடம் என்பதால் நேரில் சென்று மட்டும் தான் புக் செய்யக் கூடிய வசதி தற்போது வரை உள்ளது. ஆனால் இன்னும் ஓரிரு நாட்களில் இணைதளம் வழியாக ரூம் புக் செய்யும் வசதி இணைக்கப்படும் என சொல்லப்படுகிறது. 


இந்த புதிய கட்டிட விடுதியில் ரூம் புக் செய்ய விருப்பம் உள்ள பக்தர்கள் https://tiruchendurmurugan.hrce.tn.gov.in/ என்ற திருச்செந்தூர் கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அதில் உங்களை பற்றிய விபரங்களை அளித்து, கட்டணம் செலுத்தி, ரூம்களை புக் செய்து கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்