சஷ்டி விழா.... திருச்செந்தூரில் 100 ரூபாய் கட்டணம் ரூ.1000 ஆக உயர்வு.. பக்தர்களுக்கு ஷாக்!

Meenakshi
Nov 14, 2023,03:06 PM IST
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு கோவில் கட்டணம் இன்று முதல் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முருகனுக்குரிய விரதங்களுள் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு நாட்களும் நோன்பிருந்து கந்த சஷ்டி விரதம் கடைபிடிக்க வேண்டும். விரதம் இருந்து முருகனை வணங்கினால் தீராத நோய்கள் தீரும். திருமண பாக்கியம் கை கூடி வரும் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி மாலையில் கடற்கரையில் நடக்கிறது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக 2500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 



நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூரில் நிரம்பி வழிகின்றனர். இந்த திருவிழாவிற்காக பக்தர்கள் திருச்செந்தூரில் இந்த 6 நாட்களும் தங்கி இறைவனை வணங்குவது  வழக்கம். பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கட்டண விபரம்: 

இதற்கிடையே கோவில் கட்டணங்கள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3000மாக உயர்த்தப்பட்டுள்ளது. 

விரைவு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை எந்த விதமான முன் அறிவிப்பும் இன்றி  திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவிழா நேரத்தில் உயர்த்தியதால் பக்தர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக புலம்பி வருகின்றனர்.