வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு.. நிவாரணப் பொருட்களை அனுப்பினார் கமல்ஹாசன்

Su.tha Arivalagan
Dec 08, 2023,11:02 AM IST

சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நிவாரண பணிகளை இன்று தொடங்கினா்.


மிச்சாங் புயல் உருவாகி சென்னையே புரட்டிப் போட்டு விட்டது. அதீத புயல் மழையால் சென்னை முழுவதும் மழை நீரால் தனித்தீவு ஆனது. மின்சாரம், அத்தியாவாசிய பொருள்கள், தொலைத்தொடர்பு , போன்றவை எதுவும் இல்லாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் உள்ள தண்ணீர் முழுவதும்  வடிந்து வருவதற்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.


தற்போது சில பகுதிகளில் தண்ணீர் வடிந்து பழைய நிலைக்கு  திரும்பி உள்ளது. ஒரு சில இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் இருகின்றது. மேலும் தேங்கும் மழை நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி வருகின்றனர்.




கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என்று பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமலஹாசன் மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். 


இன்று காலை 8 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலிருந்து மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.


இதற்கிடையே, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு உதவும் நேரம் இது. இதில் அரசியல் பேசக் கூடாது, செய்யக் கூடாது . அனைவரும் களம் இறங்கிச் செயலாற்ற வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.