"ராகுல்.. உங்களுடன் நான் இருக்கிறேன்.. சத்தியமே வெல்லும்".. கமல்ஹாசன் ஆதரவு!

Su.tha Arivalagan
Mar 24, 2023,10:20 AM IST

சென்னை: ராகுல் காந்திக்கு நடிகரும், மக்கள்  நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.


மோடி என்ற துணைப் பெயருடன் கூடியவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜக முன்னாள் அமைச்சர் பூர்னேஷ் மோடி என்பவர், சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குத் தொடர்ந்தார்.


அவதூறு வழக்கு விசாரணையின்போது மன்னிப்பு கேட்கிறீர்களா என்று கோர்ட் கேட்டபோது அதை நிராகரித்து விட்டார் ராகுல் காந்தி. இந்த நிலையில் அவருக்கு நேற்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது. இது பெருத்த சர்ச்சையயும், விவாதத்தையும் எழுப்பியுள்ளது.


இந்த நிலையில் ராகுல் காந்திக்கு திமுக,  ஆம் ஆத்மி கட்சி, ராஷ்டிரிய ஜனதாதளம், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தீர்ப்பு நியாயமல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோதோ யாத்திரையில் கலந்து கொண்டு டெல்லியில் ராகுல்காந்தியுடன் நடந்து சென்றார். அவருடன் பொதுக்கூட்டத்திலும் பேசினார். தற்போது ராகுல் காந்திக்கு எதிராக வந்துள்ள தீர்ப்பு குறித்து  கமல்ஹாசன் கருத்து தெரிவிக்கையில்,  ராகுல்ஜி, நான் இந்த நெருக்கடியான நேரத்தில் உங்களுடன் இருக்கிறேன். பல சோதனைகளையும், அநீதியான தருணங்களையும் நீங்கள் பலமுறை சந்தித்துள்ளீர்கள்.  நமது நீதி பரிபாலமானது, தான் செய்யும் தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் வல்லமை படைத்தது. நீதி வழங்கும்போது நடைபெறும்  தவறுகளையும் அது சரி செய்து கொள்ளும். உங்களுக்கும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்.  உங்களது மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறியுள்ளார் கமல்ஹான்