"நாயகன் மீண்டும் வர்றார்"..  36 வருடங்களுக்குப் பிறகு ரீ- ரிலீஸ்..!

Su.tha Arivalagan
Sep 29, 2023,03:12 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் ட்ரீட் ஆக வரும் நவம்பர் 3ஆம் தேதி நாயகன் திரைப்படம் மீண்டும் வெளியிடப்படவுள்ளது. 36 வருடங்களுக்குப் பிறகு நாயகன் படம் தியேட்டர்களில்  ரிலீஸ் செய்யப்படுகிறது.


விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உலகநாயகன் கமல்ஹாசன், இந்தியன் 2 மற்றும் கல்கி போன்ற படங்களில் கமிட்டாகி உள்ளார். அடுத்த வருடம் இந்தப் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதுகுறித்து ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 





இதுதவிர,  அக்டோபர் 1 முதல் பிக் பாஸ் சீசன் 7 தொகுப்பாளராக களம் இறங்கப் போகிறார் கமல்ஹாசன். இடையில் லோக்சபா தேர்தல் வரப் போகிறது. ஆக, கமல்ஹாசன் சினிமாவிலும், டிவியிலும், அரசியலிலும் நிற்கக் கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில்தான், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் முத்திரை பதித்த, நாயகன் படம் ரீ ரிலீஸ் ஆகவுள்ளது.

1987 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில்  கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம்தான் நாயகன். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சரண்யா நாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அந்த காலகட்டத்தில் நாயகன் படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெள்ளி விழா கொண்டாடியது. 




வேலு நாயக்கர் வேடத்தில் கமல்ஹாசன் வாழ்ந்திருப்பார். அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன். வசனம் எல்லாம் இன்று வரை பிரபலமாக இருக்கிறது.  "நான் அடிச்சா நீ செத்துருவ.. நாலு பேரு நல்லாருக்கணும்னா எதுவுமே தப்பில்லை.. நாளைக்கு கணக்குப் பரீட்சை இருக்கு.. சீக்கிரம் விட்ருவீங்களா.. நீங்க நல்லவரா இல்லை கெட்டவரா".. போன்ற வசனங்கள் சில துளிகள்.




இப்படத்திற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நாயகனுக்கான தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் மற்றும் கலை இயக்குனர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது.


நாயகன் படத்திற்குப் பிறகுதான் அது போன்ற  படங்கள் தமிழில் நிறைய வர ஆரம்பித்தன. ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம், தளபதி, விஜய் நடித்த தலைவன் போன்ற படங்களும் கூட கிட்டத்தட்ட நாயகன் பாணி படங்கள்தான். 36 வருடங்களுக்குப் பிறகு  நாயகன் படம் ரீ ரிலீஸ் ஆவதால் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், திரை ரசிகர்களும் கூட மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.